நிர்பயா வழக்கு- முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்க ஜனாதிபதிக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்கும்படி ஜனாதிபதிக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
முகேஷ் சிங்
முகேஷ் சிங்
Published on

புதுடெல்லி:

நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி திகார் சிறையில் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே, தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார். இந்த கருணை மனுவை டெல்லி துணை நிலை ஆளுநர் நிராகரித்து, அதனை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். 

அந்த மனுவை உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில், முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்கும்படி ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மறுசீராய்வு மனுக்கள், மரண வாரண்டடை எதிர்த்து வழக்கு, கருணை மனு என தண்டனையை தள்ளிப்போடுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதால், நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி அதிருப்தி அடைந்துள்ளார். 

நிர்பயா மரணத்தை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடுவதாகவும், 2012ல் யார் யார் எல்லாம் நிர்பயாவுக்காக போராடினார்களோ, அவர்களே இப்போது அரசியல் லாபத்துக்காக விளையாடுவதாகவும் ஆஷா தேவி கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com