

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதர்வா மற்றும் தோடா மண்டலங்களில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. மேலும் தலைநகர் டெல்லி உட்பட வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது.
மாலை 7.23 மணியளவில் பாதர்வா மண்டலத்தில் நிகழ்ந்த முதல் அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து 7.48 மணியளவில் பாதர்வா பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 3.2ஆக பதிவானது.
பாதர்வா பகுதியின் சுற்றுவட்டாரங்களான தோடா, பலேசா, மல்வானா மற்றும் மர்மாட் உள்ளிட்ட பல இடங்களிலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
நிலஅதிர்வை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலஅதிர்வால் உயிரிழப்பு அல்லது விபத்து ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் இன்னமும் கிடைக்கவில்லை.
கடந்த 2013-ல் மட்டும் பாதர்வா பள்ளத்தாக்கில் 27 முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.