நெல்லையில் ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் ஜீப் கடத்தல் - 2 பேர் கைது

நெல்லையில் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் ஜீப் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீட்கப்பட்ட ஜீப்
மீட்கப்பட்ட ஜீப்
Published on

நெல்லை:

நெல்லை பேட்டையை சேர்ந்தவர் சுல்தான் அலாவு தீன்(வயது63). வியாபாரிகள் சங்க நிர்வாகியான இவர் நெல்லை சந்திப்பில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவர், தனக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஜீப்பை, தன்னுடைய பயிற்சி பள்ளியின் முன்பு நிறுத்தி வைத்து இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது அதனை காணவில்லை. அவருடைய ஜீப்பை யாரோ திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து சுல்தான் அலாவுதீன் நெல்லை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் எஸ்கால், சப்- இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஜீப்பை மர்மநபர்கள் கள்ளச்சாவி போட்டு திறந்து எடுத்து சென்னைக்கு கடத்தி கொண்டு சென்றிருப்பது தெரியவந்தது. அந்த ஜீப்பை சென்னையில் ஒரு ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகியிடம் அந்த கும்பல் விற்க முயற்சி செய்தனர்.

அந்த ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிக்கு, சுல்தான் அலாவுதீனை நன்கு தெரியும் என்பதால் அவர் இதுபற்றி போனில் விவரம் கேட்டார். அப்போது சுல்தான் அலாவுதீன் தனது ஜீப் திருட்டு போயிருந்த தகவலை தெரிவித்தார். தன்னுடைய ஜீப் சென்னையில் இருப்பது குறித்து போலீசிடம் கூறினார். அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர்.

அங்கு சுல்தான் அலாவுதீனின் ஜீப்பை கடத்தி வைத்திருந்த சென்னை திருவொற்றியூரை சேர்ந்த குமார்(40), களக்காடு திருக்குறுங்குடியை சேர்ந்த அருண்குமார் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட ஜீப்பை போலீசார் மீட்டு நெல்லைக்கு கொண்டு வந்தனர்.

கைதான இருவருக்கும் வேறு கார் திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com