

புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் நேற்று பா.ஜ.க எம்.பி. ஆர்.கே. சின்கா, இந்தியாவில் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் பாதிக்கப்படுபவர்கள் பற்றிய ஒரு கேள்வியை எழுப்பினார்.
அதற்கு மத்திய மந்திரி தவர்சந்த் கெலாட் பதில் அளித்து கூறியதாவது:-
இந்தியாவில் சுமார் 16 கோடி பேர் தினமும் மது வகைகளை அருந்துகிறார்கள். சுமார் 3 கோடி பேர் கஞ்சா புகைக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர்.
சுமார் 77 லட்சம் பேர் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகளை பயன்படுத்துபவர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளது.
மதுபானம் குடிப்பவர்களில் சுமார் 5 கோடியே 70 லட்சம் பேர் மதுவுக்கு மிக, மிக அடிமையாகி விட்டனர். மது போதை பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்க உடனடி உதவிகள் தேவைப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
மதுபானம் குடிப்பவர்களில் சுமார் 1 கோடியே 18 லட்சம் பேர் இளம் வயது உடையவர்கள். அவர்களை திருத்த அதிக கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு மத்திய மந்திரி தவர்சந்த் கெலாட் கூறினார்.
1500 பேர் நாடு முழுவதும் 186 மாவட்டங்களில் இந்த ஆய்வை நடத்தினார்கள். அவர்கள் சுமார் 5 லட்சம் பேரை சந்தித்து இந்த ஆய்வை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.