ராஜஸ்தானில் டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

ராஜஸ்தான் மாநிலத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தானில் டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Published on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுலை கிராமத்தில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமண தொடர்பான சடங்குகள் நடத்துவதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென சாலை ஓரமாக இருந்த டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்-மந்திரி வசுந்தரா ராஜீ மற்றும் சுகாதாரத்துறை மந்திரி காளிச்சரன் சரப் மருத்துவமனைக்கு சென்று இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினர். படுகாயமடைந்தவர்களுக்கு  இலவச சிகிச்சை அளிக்க ஆணையிட்டுள்ளனர்.

முன்னாள் முதல்-மந்திரி அசோக் கிலாட் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். மத்திய மந்திரி ராஜ்யவர்தன் ராத்தோர் சம்பவ இடத்திற்கு சென்று இன்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com