

மும்பை:
மும்பையில் கடந்த சில நாட்களாக கடலின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் கரையோரம் உள்ள வீடுகளில் கடல்நீர் புகுந்தது. மேலும் பல கடற்கரைகளில் அலைகள் மூலம் குப்பைகள் வெளியேறின. இதனால் கரையோர பகுதிகள் குப்பை மேடுகள் போல காட்சி அளித்தன.
கடலில் குப்பைகள் வீசப்படும் பிரச்சினையில் உரிய விதிமுறையை வகுக்கக்கோரி அரசு சாரா அமைப்பு சார்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று நீதிபதிகள் ஓகா மற்றும் ரியாஸ் சாக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மும்பை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், கடந்த வாரத்தில் மும்பையில் ஏற்பட்ட கடல் அலை சீற்றம் காரணமாக கடலுக்குள் இருந்து சுமார் 12 ஆயிரம் டன் குப்பைகள் வெளியேறின. இதையடுத்து கடற்கரை பகுதியை மாநகராட்சியினர் சுத்தப்படுத்தி விட்டனர் என்று தெரிவித்தார்.
இது முக்கியமான பிரச்சினை என்பதால், இந்த மனு அவசரமாக விசாரிக்கப்பட வேண்டியது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனு மீதான விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.