

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த 1-ந்தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு இயற்கை வளமும் சீரழிகிறது.
அதனால் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முதல் கட்டமாக தடை விதித்து அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கியுள்ளனர். வீடு வீடாக சென்று பிளாஸ்டிக் பை, கவர், டம்ளர் போன்றவற்றை சேகரித்தனர். பொதுமக்கள் தாமாக முன் வந்து பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைத்து வருகிறார்கள். மேலும் புத்தாண்டு தினத்திலும் பிளாஸ்டிக் சேகரிப்பில் ஈடுபட்டார்கள். 15 மண்டல அலுவலகங்களிலும் அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் களம் இறங்கினர். 31-ந்தேதி சுமார் 1.88 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டன.
1-ந்தேதி 2.25 மெட்ரிக் டன், 2-ந்தேதி 8.35 மெட்ரிக் டன் என மொத்தம் 12.48 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில நாட்களில் அபாராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தொழிற் சாலைகள், வியாபாரிகள், குடோன்கள் தயாரிப்பாளர்கள் என பல்வேறு பிரிவுகளாக பிரித்து அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.