ராமநாதபுரத்துக்கு 12 புதிய பஸ்கள் - அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்

ராமநாதபுரத்துக்கு 12 புதிய பஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த பஸ்களின் போக்குவரத்தை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரத்துக்கு 12 புதிய பஸ்கள் - அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் புதிய பஸ்கள் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது. விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கலந்து கொண்டு புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போக்குவரத்து துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். அவற்றில் காரைக்குடி மண்டலத்திற்கு 19 பஸ்களும், ராமநாத புரம் மாவட்டத்திற்கு 12 பஸ்களும் வழங்கப்பட்டு உள்ளன.

புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த பஸ்களில் ராமநாதபுரம் - மதுரை வழித்தடத்தில் 3 பஸ்களும், ராமேசுவரம் - மதுரை வழித்தடத்தில் 2 பஸ்களும், ராமேசுவரம்- திருப்பூர், முதுகுளத்தூர்- கோவை, முதுகுளத்தூர் - மதுரை, பரமக்குடி - சிதம்பரம், பரமக்குடி - மதுரை, ஏர்வாடி - குமுளி, ஏர்வாடி - ஈரோடு ஆகிய வழித்தடங்களில் தலா ஒரு பஸ் வீதம் மொத்தம் 12 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் கோமதி செல்வகுமார், கோட்ட மேலாளர்கள் சிவலிங்கம், சரவணன், போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் பத்மகுமார், தெய்வேந்திரன், பாலமுருகன், தமிழ்மாறன், ரவி, இருளப்பன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com