103 வயதிலும் விவசாயம் செய்து வரும் மூதாட்டி

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 103 வயதான மூதாட்டி அரசியலில் ஈடுபடுத்தி கொள்வதுடன் தனது இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். #Pappammal
பாப்பம்மாள்
பாப்பம்மாள்
Published on

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள் என்கிற ரங்கம்மாள் (வயது 103). இவர் 1914-ம் ஆண்டு தேவனாபுரம் கிராமத்தில் பிறந்தார்.

தனது சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து விட்டார். இவருடைய பாட்டி இவரையும் இரு சகோதரிகளையும் தேக்கம்பட்டி அழைத்துவந்து அங்கு மளிகை கடை வைத்து தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

பாட்டி இறந்த பிறகு மளிகை கடையை பாப்பம்மாள் எடுத்து நடத்த தொடங்கினார். இதே கிராமத்தில் ஓட்டலும் வைத்துள்ளார். சிறுக, சிறுக சேர்க்கப்பட்ட பணத்தில் தேக்கம்பட்டி கிராமத்தில் 10 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி விவசாய பணியிலும் பாப்பம்மாள் ஈடுபட்டு வந்துள்ளார்.

திருமணமாகி குழந்தைகள் இல்லாமல் இருந்த இவர் தனது சகோதரிகளின் குழந்தைகளை தத்து எடுத்துள்ளார். தி.மு.க.வில் தன்னை சிறுவயதிலேயே இணைத்துக் கொண்ட பாப்பம்மாள் 1959 -ம் ஆண்டு தேக்கம்பட்டி பஞ்சாயத்து உறுப்பினராகவும். 1964 -ம் ஆண்டு யூனியன் கவுன்சிலராகவும், மாதர் சங்கத் தலைவியாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விவாதக் குழு அமைப்பாளராகவும் பதவிகளை வகித்துள்ளார்

தற்போது பாப்பம்மாளுக்கு 103 வயது தொடங்கி உள்ளது. இந்த வயதிலும் அவர் தன்னை அரசியலில் ஈடுபடுத்தி கொள்வதுடன் தனது இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இது தொடர்பாக பாப்பம்மாளிடம் கேட்ட போது, வயது மூப்பு காரணமாக அளவான உணவு எடுத்துக் கொள்வதாகவும் அதிலும் குறிப்பாக காலையில் குளித்துவிட்டு தான் கடந்த 50 ஆண்டுகளாக வாழை இலையில் உணவுகளை உட்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அன்றைய காலகட்டத்தில் வீட்டு வேலைகளையும் விவசாய வேலைகளையும் அனைத்தையும் தாங்களே செய்து வந்த காரணத்தினால் தங்கள் உடம்பில் நோய்கள் எதுவும் வந்ததில்லை.

இதனால் கிராமங்களில் மருத்துவமனைகளே இல்லை எனவும் தெரிவித்தார். அந்த காலத்தில் வயிற்றுவலி வந்தால் வெற்றிலையில் உப்பை வைத்து சாப்பிடுவதும் தலைவலி வந்தால் நெற்றியில் பாக்குக் கொட்டை வைத்து அதை குணப்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com