

கோவை:
கோவை காரமடை சிக்காரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 102). இவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்திருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை சோதனை செய்த போது சிறிய கேனில் மண்எண்ணெய் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் மூதாட்டியிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் அந்த மூதாட்டி ஒரு புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த எனக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். தற்போது இளைய மகளுடன் வசித்து வருகிறேன். இந்த நிலையில் வீடு கட்ட வேண்டும் என்று கூறி இளையமகள் தன்னுடைய சொத்தை எழுதி வாங்கி விட்டார். மேலும் வீட்டில் தங்க விடாமல் கொடுமைபடுத்தி வருகிறார்.
இதனால் என்னுடைய சொத்தை திருப்பி என் பெயருக்கு எழுதி தர நடவடிக்கை எடுக்குமாறு காரமடை போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த பலனும் இல்லை. மாவட்ட கலெக்டரிடமும் 3 முறை புகார் மனு அளித்தேன். ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் தான் தீக்குளிக்கும் எண்ணத்துடன் மண்எண்ணெய் கேனுடன் வந்தேன். ஆனால் அதை போலீசார் பறித்து விட்டனர்.
இவ்வாறு மூதாட்டி கூறினார்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.