

லக்னோ:
நம் நாட்டில் திருமணம் என்பது வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. இந்த நிகழ்வினை அனைத்து உறவினர்களையும் அழைத்து மிக கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.
பொதுவாக திருமண நிகழ்வுகளில் உறவினர்களிடையே சில சலசலப்புகள் ஏற்படுவதும் இயல்பான ஒன்றே. ஆனால், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் திருமண விருந்தில் உணவுத்தட்டுகள் இல்லாததால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரை பறிகொடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், விக்ராம்பூர் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற திருமண விருந்தில் கலந்து கொள்வதற்காக பலர் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு உணவு பரிமாறுவதற்கு உணவுத்தட்டுகள் இல்லாமல் போனதால் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு சண்டையாக மாறியதில், விஷால் எனும் இளைஞர் பலியானார். மேலும் 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவுத்தட்டுக்காக ஏற்பட்ட சண்டையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.