

இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூலம் கடந்த 2017-18ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறித்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சோதனைகளில் உத்தரபிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் விற்கப்படும் உணவுகளில் அதிக கலப்படம் செய்யப்படுவதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து 2018-19ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறித்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, பஞ்சாப், மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றிருந்தன.
இது குறித்த கேள்விகள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த உணவு மற்றும் நுகர்வோர் துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் கூறுகையில், ‘2016-19 வரையிலான கால கட்டத்தில் தரமற்ற, கலப்படமான உணவுகளை விற்றதற்காக 8,100 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.43.65 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்டன’ என கூறினார்.