என் மலர்


மெய்யழகன்
உறவுகளையும் உணர்வுகளையும் சொல்லும் படம்.
கதைக்களம்
தஞ்சாவூரில் வாழ்ந்து வந்த அரவிந்த்சாமியின் குடும்பம், சொந்தங்களின் துரோகத்தால் சொந்த வீட்டை இழந்து சென்னைக்கு குடியேருகிறார்கள். அதன்பின் 20 வருடங்களாக ஊர் பக்கமே செல்லாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் சித்தப்பா மகளின் திருமணத்திற்கு போக வேண்டிய சூழல் ஏற்பட, குடும்பத்தின் சார்பாக அரவிந்த்சாமி தஞ்சாவூர் செல்ல நேரிடுகிறது.
மனது நிறைய தங்கை மீது பாசம் இருந்தாலும், உறவினர்களின் துரோகத்தால் வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு செல்கிறார் அரவிந்த்சாமி. அங்கு உறவினராக கார்த்தி அறிமுகமாகி, அவரிடம் அன்பு பொழிகிறார். கார்த்தி எந்தவிதத்தில் உறவு, அவர் பெயர் என்ன? என்பது கூட தெரியாமல், அவருடன் பழகுகிறார் அரவிந்த்சாமி. ஒரு கட்டத்தில் இருவரும் நெருங்கி பழக, கார்த்தி யார் என்று தெரியாமல் முழிக்கிறார்.
இறுதியில் கார்த்தி யார் என்பதை அரவிந்த்சாமி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கார்த்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது பேச்சும், உடல் மொழியும் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக சிரிக்கவும் வைக்கிறார். அதே சமயம் கண்கலங்கவும் வைத்திருக்கிறார். ஜல்லிக்கட்டு கதை சொல்லும் போது, புல்லரிக்க வைக்கிறார். அத்தான் அத்தான் என்று சொல்லி, அந்த வார்த்தையை நம்மிடமே கடத்தி விடுகிறார்.
கார்த்திக்கு இணையாக போட்டி போட்டு நடித்து இருக்கிறார் அரவிந்த்சாமி. பல இடங்களில் நடிப்பால் நெகிழ வைத்து இருக்கிறார். வீட்டை இழந்த சோகம், தங்கை பாசம், கார்த்தி மீது பாசம் என கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக கார்த்தி வீட்டை விட்டு அரவிந்த்சாமி வெளியேறும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
கார்த்தியின் மனைவியாக நடித்த ஸ்ரீ திவ்யா, அரவிந்த்சாமியின் மனைவியாக நடித்த தேவதர்ஷினி, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், இளவரசு, கருணாகரன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
காதலர்களின் உணர்வுகளை 96 படம் மூலம் கொடுத்த பிரேம் குமார், இப்படத்தில் உறவுகளின் பாசத்தை பற்றி பேசி இருக்கிறார். ஒரு இரவு பயணத்தின் மூலம் கதை சொல்லி இருப்பது வியப்பளிக்கிறது. கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். திருமணத்தில் அண்ணன் தங்கை பாசத்தால் பார்ப்பவர்கள் அனைவரையும் நெகிழ வைத்து இருக்கிறார். அதுபோல் ஜல்லிக்கட்டு கதை, கரிகாலன் கதை சொல்லும் போது சிலிர்க்க வைத்து இருக்கிறார். இருவரை மட்டுமே வைத்து திரைக்கதை நகர்த்துவது பெரிய கடினம். அதை சாதுரியமாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர்.
இசை
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜின் கேமரா அழகாக படம் பிடித்து இருக்கிறது. உணர்வுகளை காட்சிப்படுத்துவதில் இசையும், ஒளிப்பதிவும் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது இருக்கிறது.
தயாரிப்பு
இப்படத்தை 2டி எண்டர்டெயின்மண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
Very nice picture










