The Greatest of All Time

The Greatest of All Time

பழிக்கு பழி வாங்கும் கதை
Published on
The Greatest of All Time(4 / 5)

கதைக்களம்

டெல்லியில் மனைவி சினேகா மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார் விஜய். இவர் தீவிரவாதத்தை தடுக்கும் ரகசிய பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தலைமையாக ஜெயராம் இருக்கிறார். இவர்கள் செய்யும் வேலை சினேகாவுக்கு தெரியாமல் இருக்கிறது.

ஒரு மிஷனுக்காக விஜய் பாங்காக் செல்ல நேரிடுகிறது. தன்னுடன் சினேகா மற்றும் தன் மகனை அழைத்து செல்கிறார். அங்கு சினேகாவுக்கு விஜய் யார் என்ற விஷயம் தெரியவருகிறது. மேலும் சினேகாவுக்கு குழந்தை பிறக்கும் நிலையில் விஜய்யின் மகன் கடத்தப்பட்டு விபத்தில் இறக்கிறான்.

இதிலிருந்து விஜய், தான் செய்யும் வேலையை மாற்றி சென்னையில் சினேகா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். சில வருடங்கள் கழித்து மாஸ்கோ தூதரகத்திற்கு செல்கிறார் விஜய். அங்கு தன் மகன் உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து சென்னை அழைத்து வருகிறார்.

வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் மகன், ஜெயராமை கொலை செய்கிறார்.

இறுதியில் விஜய்யின் மகன் ஜெயராமை கொலை செய்ய காரணம் என்ன? ஜெயராமை கொலை செய்தது யார் என்று விஜய் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சினேகாவை ஏமாற்றும் போதும், அவர் மீது பாசம் காட்டும் போதும் பளிச்சிடுகிறார். குறிப்பாக மகன் இறந்தை பார்க்கும் போதும், அதை சினேகாவிடம் சொல்லும் போதும் நெகிழ வைக்கிறார். தனக்கே உரிய ஸ்டைலில் நடனம் ஆடி அசத்தி இருக்கிறார். இளம் வயதில் வரும் விஜய் ஒரு பக்கம் துறுதுறு இளைஞனாகவும், ஒரு பக்கம் மிரட்டலான நடிப்பையும் கொடுத்து மனதில் பதிகிறார்.

மனைவியாக நடித்து இருக்கும் சினேகா அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். காதலியாக வரும் மீனாட்சி சௌத்ரி ஆங்காங்கே வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். மகள் பாசத்தில் கவனம் பெற்று இருக்கிறார் பிரசாந்த். எதிர்பாராத வேடத்தில் பிரபு தேவாவும், கொடுத்த வேலையை அஜ்மலும் செய்திருக்கிறார்கள். மிரட்டலான நடிப்பை கொடுத்து இருக்கிறார் மோகன்.

இயக்கம்

பழிவாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அப்பா மகன் விளையாட்டை சிறப்பாக கையாண்டு இருக்கிறார். இரண்டு விஜய் பேசும் காட்சிகள் மாஸ். சின்ன சின்ன சர்ப்ரைஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். விஜயகாந்த் வரும் காட்சி தியேட்டரில் விசில் பறக்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பதிப்பில் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார் வெங்கட் பிரபு.

இசை

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். குறிப்பாக  ஆட்டமா பாடல், சொர்க்கமே என்றாலும், காதலின் தீபம் ஒன்று பாடல் பின்னணியில் ஒலிப்பது சிறப்பு.

ஒளிப்பதிவு

சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாக அமைந்துள்ளது.

தயாரிப்பு

இப்படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது

வீடியோக்கள்

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

X

Maalai Malar
www.maalaimalar.com