

கண்கள், கை-கால்கள் போன்ற இரட்டை உறுப்புகளில் ஒன்றையோ இரண்டையுமோ நீக்கினாலும் ஒருவர் உயிர் வாழ முடியும். அதேபோல், குடல் வால், பித்தப்பை, டான்ஸில் போன்றவற்றை நீக்கினாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. சிறுநீரகம், நுரையீரல் போன்ற இரட்டை உள் உறுப்புகளில் ஒன்றை நீக்கினாலும் நம்மால் வாழ முடியும். ஆனால், நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு அதிகம் என்பதால் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இரைப்பை, சிறுகுடல், பெருங்குடலின் சில பகுதிகளை அகற்றினாலும் அதாவது நீளத்தைக் குறைத்தாலும் உயிர் வாழ முடியும். இவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க, மருத்துவர் பரிந்துரையுடன் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுகுடலிலோ பெருங்குடலிலோ புற்றுநோய் உருவாகும்போது, அந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நீக்கிவிடுவார்கள். சிறுகுடல், பெருங்குடல் இரண்டுமே மிக நீளமானவை என்பதால் அதன் சிறுபகுதி நீக்கப்படுவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
அப்பெண்டிஸ் எனப்படும் குடல்வால் பகுதி கிருமித்தொற்றினால் அழுகி விடும்போது வயிற்றில் கடும் வலி ஏற்படும். அப்போது அந்த குடல்வாலையே அகற்றி விடுவார்கள்.
பித்தப்பையில் கல் உருவாகும்போது பித்தப்பை நீக்கப்படுகிறது. பித்தப்பை மிகவும் மென்மையானது என்பதால் அதனை அறுவைசிகிச்சை செய்து கற்களை நீக்கமுடியாது. எனவே, முழு பித்தப்பையையும் அகற்ற வேண்டியுள்ளது. பித்தப்பைக் கல் இருக்கும் அனைவருக்கும் பித்தப்பை நீக்கப்படமாட்டாது. வயிற்றில் வலி இருப்பவர்களுக்கு மட்டுமே நீக்கப்படுகிறது.
ஏனெனில், பித்தப்பையின் இயங்கும் தன்மை முழுமையாகக் குறையும்போதுதான் வலி ஏற்படுகிறது. பித்தப்பையை நீக்குவதால் உடலின் செயல்பாடுகளில் வேறு பாதிப்புகள் எதுவும் இருக்காது. பித்தப்பையில் கட்டி வந்தால் அதனை ஒட்டி இருக்கும் கல்லீரலின் ஒரு பகுதியையும் வெட்டி எடுக்க வேண்டியது இருக்கும். உடல் பருமன் அறுவைசிகிச்சையில், முன்பு இரைப்பைக்கு உணவு செல்லாமல், நேரடியாக சிறுகுடலுக்குச் செல்லும் வகையில் பைபாஸ் செய்யப்பட்டது. தற்போது, இரைப்பையின் அளவை குறைத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.