மகிழ்ச்சிக்கான மாதங்களும்.. தாம்பத்திய மனநிலையும்..

காலநிலையை புரிந்துகொண்டு தம்பதிகள் தாம்பத்திய செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவர்களுக்குள் அதிக இணக்கத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.
தாம்பத்திய மனநிலை
தாம்பத்திய மனநிலை
Published on

தம்பதிகளுக்கு இடையேயான தாம்பத்திய வாழ்க்கையில் சீதோஷ்ணநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குளிர்காலத்தில் அவர்கள் தாம்பத்தியத்தில் அதிக நெருக்கம் காட்டுவதும், கோடைகாலத்தில் விலகியிருப்பதும் வழக்கமாக இருக்கிறது. அதனால் காலநிலையை புரிந்துகொண்டு தம்பதிகள் தாம்பத்திய செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவர்களுக்குள் அதிக இணக்கத்தையும், மகிழ்ச்சி யையும் ஏற்படுத்தும்.

தென்னிந்தியாவில் ஜூலை முதல் ஜனவரி வரையிலான காலகட்டம் தாம்பத்தியத்திற்கு அதிக சவுகரியமானது என்று பாலியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். ஜூலை மாதத்தில் பெரும்பாலும் மழை இருந்துகொண்டிருக்கும். அதனால் கணவனும், மனைவியும் மனோரீதியாக அதிக உற்சாகத்துடன் காணப்படுவார்கள். மேகம் சூழ்ந்திருக்கும் சூழல் மனதில் எப்போதும் மகிழ்ச்சியை நிரப்பும். அது தாம்பத்திய இன்பத்திற்கு துணைபுரிவதாக அமையும்.

பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டம் உஷ்ணம் நிறைந்தது. அப்போது உடல் எளிதாக சோர்ந்துவிடும். அது தாம்பத்திய ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிடும். அதே நேரத்தில் கோடைகாலத்தில் குளிர்பிரதேசங்களை நோக்கி பயணப்படுவதும், அங்கு ஜோடியாக தங்கியிருப்பதும் தாம்பத்திய ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமையும். குளிர் பிரதேசங்களில் உள்ள அறைகளில் இரண்டு மூன்று நாட்கள் வெளியே வராமலே இருந்தால், தம்பதிகளிடம் இணக்கமும் புரிதலும் அதிகரிக்கும். அவர்கள் உடலில் புத்துணர்ச்சியும், சக்தியும் அதிகரிக்கும். அது அவர்களது தாம்பத்தியத்திலும் எதிரொலிக்கும்.

சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப ஆண்களின் மனநிலையிலும் வித்தியாசம் காணப்படும். ஆனாலும் பெரும்பாலும் ஆண்களின் மனநிலை சீராகத்தான் இருக்கும். அதே நேரத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ஹார்மோன் சுரப்பதில் சமச்சீரற்ற நிலை தோன்றும். அதற்கு தக்கபடி அவர்களது மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிலக்குக்கு முந்தைய நாட்களில் ஏற்படும் ஹார்மோன் சுரப்பு வித்தியாசங்களால் அவர்களுக்கு எரிச்சல் கலந்த மனநிலை தோன்றிவிடும். அதனால் அமைதியற்றவர்களாக நடந்துகொள்வார்கள். அது அவர்களது தாம்பத்திய ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிடும்.

சில தருணங்களில் ஹார்மோன் மாற்றங்களால் பாலியல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து தாம்பத்திய ஆர்வத்தை தூண்டும். ஆனால் அதை செயல்படுத்தும் விதத்தில் அவர்களது உடல்நிலை இருக்காது. அதனாலும் தாம்பத்திய உறவில் இருந்து விலகியிருக்க விரும்புவார்கள்.

மாதவிலக்கு நாட்கள் முடிந்த பின்பு பொதுவாகவே பெண்களுக்கு தாம்பத்திய ஆர்வம் அதிகரிக்கும். அதை கணவர் புரிந்துகொண்டு, மனைவியின் மனநோக்கம் அறிந்து செயல்பட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டால் மகிழ்ச்சி நீடிக்கும். தாம்பத்திய தொடர்பை சிறப்பாக அமைத்துக்கொள்ள கணவரின் மனநிலையையும், உடல்நிலையையும் அறிந்து மனைவி நடந்துகொள்ளவேண்டும். அதுபோல் மனைவியின் நிலை அறிந்து கணவரும் நடந்துகொள்வது அவசியம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com