என் மலர்
பெண்கள் உலகம்

சொதப்பாமல் காதலிப்பது எப்படி?
- 'காதல் என்பது முட்டாளின் ஞானம் மற்றும் ஞானிகளின் முட்டாள்தனம்' என்று ஆங்கில பொன்மொழி உள்ளது.
- புத்திசாலிகள் பெரும்பாலும் தாங்களும், தங்களை சார்ந்தவர்களும், இப்படிதான் செயல்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.
காதல் என்பது ஆழமான மற்றும் சிக்கலான உணர்ச்சிகளின் சங்கமம். காதலில் எப்போதும் லாஜிக் பார்க்கக்கூடாது. மேஜிக் மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று கூறுவார்கள். அதனால்தான் என்னவோ திறமைசாலிகளும், புத்திசாலிகளும் எப்போதும் காதலில் போராடுகிறார்கள்.
'காதல் என்பது முட்டாளின் ஞானம் மற்றும் ஞானிகளின் முட்டாள்தனம்' என்று ஆங்கில பொன்மொழி உள்ளது.
பொதுவாக புத்திசாலித்தனம் சிறப்பான குணமாக கருதப்பட்டாலும், அது சில நேரங்களில் காதல் விஷயங்களில் எதிர்பாராத சவால்களை ஏற்படுத்தக்கூடும். விமர்சன சிந்தனை, பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண்பவர்கள் அதே பகுப்பாய்வு மனநிலையுடன் காதலையும் அணுகலாம்.
இது அவர்களின் உறவுகளில் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தலாம். சரி..! புத்திசாலித்தனமாக செயல்படுபவர்கள், காதலில் எப்படியெல்லாம் சொதப்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்வோம்.
ஆழமான சிந்தனை
புத்திசாலி நபர்கள் சூழ்நிலைகளை ஆழமாக பகுப்பாய்வு செய்கிறார்கள். பெரும்பாலும் துணையின் மனநிலை, காதல் கை கூடுவதற்கான வாய்ப்புகள், காதல் உண்டாக்க இருக்கும் சிக்கல்கள், இருதரப்பு குடும்ப புரிதல் இப்படி நீளமாக சிந்தித்த பின்னரே, காதல் உறவில் அடியெடுத்து வைக்கிறார்கள். அப்படி காதலிக்க ஆரம்பித்தாலும், தன்னுடைய துணையுடன் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வதில்லை. அவர்களுக்கு தேவையானதை மட்டும், அதுவும் அவர்களை பாதிக்காத விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள். இவை, காதலன்-காதலிக்குள் வெளிப்படை தன்மை குறித்த சர்ச்சைகளை, பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்பிருக்கிறது.
பர்பெக்ட்
புத்திசாலிகள் பெரும்பாலும் தாங்களும், தங்களை சார்ந்தவர்களும், இப்படிதான் செயல்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். கலந்துரையாடல், புரிதல், காதல் இப்படி எல்லாவற்றிலும் ஒரு முதிர்ச்சியை (மெச்சூரிட்டி) எதிர்பார்க்கிறார்கள். இந்த பெர்பெக்ஷனை எல்லா சமயங்களிலும் எதிர்பார்ப்பது கடினம். ஆனாலும் ஒரு சிலர் எதிர்பார்ப்பதால், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பயம்
புத்திசாலித்தனமான நபர்கள் காதலில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பு அதன் நீண்டகால தாக்கங்களை பற்றி சிந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் நிதி நிலை, காதல் உறவின் வெற்றி-தோல்வி வாய்ப்புகள் இப்படி எல்லாவற்றையும் அதிகமாக கணக்கிடுவதால், காதல் உறவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பு தயங்குகிறார்கள்.
உற்ற துணை
தங்களுடைய புரிதல், புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப துணைத்தேடுவதுதான், இவர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால். எல்லா மனிதர்களும், எல்லா விஷயங்களிலும் சிறப்பானவர்களாக இருப்பர் என்று சொல்லிவிட முடியாது. சிலருக்கு சில விஷயங்களில் ஆழ்ந்த புரிதல் இருக்கலாம். ஆனால் எல்லா விஷயங்களிலும் அதை எதிர்பார்க்கக்கூடாது. ஆனால் இந்த விஷயத்தில்தான், பலருக்கும் சிக்கல் உண்டாகிறது. தங்களைபோலவே, ஆழ்ந்த சிந்தனை, ஆழ்ந்த புரிதல் கொண்ட துணையை தேடி பலரும் ஏமாந்துவிடுகிறார்கள்.