சகோதரி எனும் இரண்டாவது 'தாய்'

இன்று (ஆகஸ்டு 7) 'தேசிய சகோதரிகள் தினம்' கொண்டாடப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சகோதரி நம்முடைய சிறந்த நண்பராகி விடுவார்.
சகோதரி எனும் இரண்டாவது 'தாய்'
Published on

ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இரண்டாவது தாயாக இருப்பவர் அவருடைய சகோதரிதான். சிறுவயதில் இருந்து எதிரும் புதிருமாக இருந்தாலும், நெருக்கம் இல்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவரே நம்முடைய சிறந்த நண்பராகி விடுவார்.

இன்னும் சில நேரங்களில், சகோதரியுடனான பகிர்வு, பிணைப்பு என்பது தோழமை உணர்வையும் தாண்டி, 'அன்னை' என்ற நிலையை அடைந்துவிடும். இவ்வாறு அனைத்து உறவுகளின் சங்கமமாக விளங்கும் 'சகோதரி' எனும் உறவை மதித்து கொண்டாடும் விதமாக, ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 7) 'தேசிய சகோதரிகள் தினம்' கொண்டாடப்படுகிறது.

மூத்தவர், இளையவர் என சகோதரி எந்த வயதினராக இருந்தாலும், அவருடைய கவனம் எப்போதும் நம் நிழலாக செயல்படும். அவர் நம் வாழ்வின் முதல் விமர்சகராக விளங்குவார். நம்முடைய மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு, மறைமுகமாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்.

தகுந்த நேரத்தில் வழிகாட்டியாக, பாதுகாப்பு அரணாக, அன்பின் அரவணைப்பாக, வாழ்வின் அனைத்து கட்டத்திலும் நம்முடன் பக்கபலமாக இருக்கும் சகோதரி என்ற உன்னத உறவை, மகிழ்ச்சியுடன் நம் வாழ்க்கைப் பயணத்தில் உடன் அழைத்துச் செல்வோம்.

X

Maalai Malar
www.maalaimalar.com