உறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்?

தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித்தனியாக பிரிந்து இயங்குகிறார்கள். மனித இனம் நிம்மதியற்ற பாதையை தேர்ந்தெடுத்து ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறது.
உறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்?
Published on

எதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்களை உதறி தள்ளிவிட்டு வேகமாக ஓடினார்கள். பந்தயம் கடினமாக இருந்த போது வேகத்தை மேலும் கூட்ட தாய்மொழி தடையாக இருக்கவே அதையும் ஒதுக்கி வைத்து ஓடினார்கள். பின்னர் தர்ம சிந்தனைகள், கடமை, கண்ணியம், கூட சுமைகளாகிப்போயின.

எனவே அவை அனைத்தையும், உதறி தள்ளிவிட்டு ஓட்டத்தை தொடர்ந்தனர். உறவுகள் சுமையாக தொந்தரவாக அவர்களுக்கு தோன்றின. எனவே அவற்றையும் விட்டு தள்ளினார்கள் அல்லது வில(க்)கி ஓடினார்கள். இந்த நவீன மனிதர்களுக்கு பொருளாதார வசதி, புகழ், வெற்றிகரமான வாழ்க்கை என்ற அடங்காத வெறி மட்டும் எஞ்சி உள்ளதால் பந்தயத்தில் வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இனி அவர்கள் வீசி எறிய எதுவுமில்லை குடும்பங்கள் சிதறிக்கிடக்கின்றன.

மடிக்கணினி திரை வழியாக பேரப்பிள்ளைகளை கொஞ்சும் பெரியவர்களை பெற்றெடுத்திருக்கிறார்கள், பந்தயத்தில் ஓடும் பிள்ளைகள். பிறந்த குழந்தையின் பசிக்கு பாலூட்டவும் குளிப்பாட்டவும் நேரம் இல்லாத இளம் அம்மாக்களும் உருவாகி விட்டார்கள். மனைவி வலியால் துடித்தாலும் அரவணைத்து மருந்து கொடுத்து அக்கறையும் பாசமும் காட்ட நேரம் இல்லாத கணவர்களும் மலிந்து போனார்கள்.

பல பெரியவர்களுக்கு பிள்ளைகளை பார்க்காத ஏக்கத்தில் மாரடைப்பு வருகிறது. சிலருக்கு அவர்கள் படும் பாட்டை நினைத்தவாரே உயிர் பிரிகின்றது. மருத்துவ செலவுக்கு அனுப்பும் பணம் கூட அவரவர் கணக்குகளில் வங்கிகளில் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லவும் முடிவதில்லை. எல்லோருடைய நேரத்தையும் கேளிக்கைகளும், செல்போன்களும் விழுங்கிவிட்டன.

தொடு திரையில் வாழ்த்துக்கள். நகரங்கள் விரிவடைய மனித மாண்பு வெகுவாக சுருங்கி விட்டது. மூன்று வயது நிரம்பாத குழந்தைகள் மழலை காப்பகங்களுக்கும், ப்ளே ஸ்கூல்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களின் ஓட்டத்திற்கு இந்த குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி கூட தடையாக தென்படுகின்றது. தொடக்கத்தில் கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாகின.

இப்போது தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித்தனியாக பிரிந்து இயங்குகிறார்கள். இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை மனித இனம் நிம்மதியற்ற பாதையை தேர்ந்தெடுத்து ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறது. இனி அதுவே நினைத்தாலும் நிறுத்த முடியுமா, என்ன? 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com