

பிரசவத்தின்போது அதிக எடையில் சிசு வளர்ந்திருந்தால், பிரசவ பாதையில் வெளிவருவதில் அதிக சிரமம் உண்டாகும். இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக நான்கு கிலோ, நான்கரை கிலோ என்ற எடையில் குழந்தைகள் பிறப்பதைப் பார்க்கலாம்.
கருப்பையினுள் குழந்தை ஊட்டமுடன் வளர்வதற்கு சத்துப் பவுடர்களும் டானிக்குகளும் தேவையா என்பதை சிந்தித்து உட்கொள்ள வேண்டும். சத்துக்குறைபாடு உள்ள ஒருவர், தேவைப்படும் மருந்துகளை எடுக்கலாம்.
சிசேரியன்களுக்கு சில கர்ப்பிணிகளின் வாழ்க்கை முறையும் காரணம். கர்ப்பம் அடைந்தவுடன் முற்றிலுமாக ஓய்வு எடுப்பது அவசியமில்லை. சிறுசிறு வேலைகளை தாரளமாக செய்யலாம். எளிய நடைப்பயிற்சி மற்றும் யோகப் பயிற்சிகளின் மூலம் பிரசவத்தை எளிதாக எதிர்கொள்ளலாம். சுகப்பிரசவத்திற்கென பிரத்யேக ஆசனங்கள் இருக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையுடன் செய்யலாம். முக்கியமாக பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி, மனதை சாந்தப்படுத்துவதற்கு உதவும். மேலும், உடல் திசுக்களுக்குத் தேவையான பிராணவாயுவையும் தடையின்றி சேர்க்கும்.
கர்ப்பகாலம் தொடங்கிய உடனே, அதைச் சார்ந்த சந்தேகங்களையும், கர்ப்பகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைகள் பற்றியும் அனுபவமுள்ளவர்களிடம் அறிவுரை கேட்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையோடு வீட்டில் இருக்கும் முதியவர்களிடத்திலும் ஆலோசனைகளைப் பெறலாம். பிரசவகாலம் நெருங்கும்போது ஏற்படும் பதற்றத்தின் காரணமாக அதிகரிக்கும் குருதியழுத்தமும் சுகமகப்பேற்றிற்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.