

பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மாருக்கு குழந்தை பிறந்ததும் கட்டாயமாக முடி கொட்டும். பெண்கள் தாய்மைப் பேறை அடைந்தது முதல் இரும்புச் சத்து, புரதச் சத்துக்கள் நிறைந்த மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி குழந்தையின் வளர்ச்சிக்காக தினமும் எடுப்பார்கள். இது குழந்தையின் வளர்ச்சி மட்டுமின்றி, தாயின் ஆரோக்கியத்தையும் சேர்த்தே மேம்படுத்தி, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முடி நன்றாக, செழிப்பாகக் காணப்படும். ஆனால் குழந்தை பிறந்த பிறகு மருந்து மாத்திரைகளை உண்பதை தாய்மார்கள் நிறுத்தியதும், தானாகவே பெண்களுக்கு முடி கொட்டத் துவங்குகிறது.
அதேபோல் குழந்தை பால் குடியினை மறக்கும்போதும் பெண்களுக்கு நிறைய முடி கொட்டும். ஏனெனில் பால் கொடுக்கும்போது குழந்தைக்காக ஆரோக்கிய உணவுகளை தேடித்தேடி உண்ணும் தாய்மார்கள் பால் கொடுப்பதை நிறுத்தியதும், ஆரோக்கியத்தை கண்டுகொள்வதில்லை. செடிக்கு உரம் போட்டு, தண்ணீர் விடுவதை நிறுத்தி விட்டால் எப்படி வாடத் துவங்குமோ அதுமாதிரியான ஒரு நிகழ்வுதான் இது.