

நெஞ்செரிச்சல், தலைவலி, உடல் சோர்வு, மயக்கம், நகம் உடைத்தல், உடலில் வலு இல்லாதது போல உணர்வது இப்படி பல அறிகுறிகள் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும். இதில் அனைத்து அறிகுறிகளும் ஒருவருக்கு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில அறிகுறிகள் சிலருக்கு இருக்கும்.
ஹீமோகுளோபின் குறைய காரணம்:
சரிவிகித உணவை சரியாக உண்ணாமல் இருப்பதே ஹீமோகுளோபின் குறைய காரணம் ஆகும். பொதுவாக இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை தவிர்பவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்கும் இயற்கை உணவுகள்!
இயற்கை உணவுகள் மூலம் மட்டும் ஆரோக்கியத்தையும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கச் செய்ய முடியும். அப்படி சில உணவுகளை ரத்த விருத்திக்காகவே பிரத்யேகமாக சாப்பிட்டு, ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள்.
முருங்கைக் கீரையைக் மூன்று கைப்பிடி அளவு எடுத்து, ஒரு கைப்பிடியளவு துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்து இறக்கும் முன் ஒரு கோழி முட்டையை உடைத்து விட்டுக் கிளறி, ஒரு தேக்கரண்டி அளவு நெய்யும் சேர்த்துத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உண்டாகும். உடல் வலிமையோடு இருக்கும்.
பொன்னாங்கன்னிக்கீரையைப் பொரியல் செய்து பகல் உணவுடன் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகி உடல் பலம் பெறும்.
புதினாக் கீரையை ஆய்ந்து, ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கி வடிக்கட்டி காலை, மாலை அரை டம்ளர் வீதம் எடுத்து அரை டம்ளர் பசுவின் பால் கலந்து, சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும் (நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை தவிர்க்கவும்)
அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பதிய இரத்தம் உற்பத்தியாகும்.
தினமும் உலர்ந்த திராட்சையோ அல்லது பச்சை திராட்சையோ சாப்பிட்டு வர ரத்தம் தூய்மை பெறும். தினசரி 20 கிராம் பப்பாளிப் பழத்தைத் சாப்பிட்டு ஒரு டம்ளர் காய்ச்சிய பாலை குடித்து வந்தால், புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
அத்திப்பழம் இரத்த விருத்திக்கு முழுப்பலன் அளிக்க வல்லது, “ஹீமோகுளோபின்” குறைவு காரணமாக உடம்பு வெளுத்து, சுறுசுறுப்பின்றி சோர்வாக இருப்பவர்கள், தினசரி சீமை அத்திப்பழம் (நாட்டு மருத்துக் கடைகளில் கிடைக்கும்) சாப்பிட்டு வருவது நல்லது.