குழந்தைகளைப் பாதிக்கும் லைஃப் ஸ்டைல் நோய்கள்

குழந்தையும் கேட்பாரின்றி ஆரோக்கியமற்ற கண்ட உணவுகளையும் உண்டு, ஆரோக்கியமற்ற விளையாட்டுகளில் தன்னையும் தன் நேரத்தையும் மூழ்கடிக்கின்றனர். விளைவு, விதவிதமான லைஃப் ஸ்டைல் நோய்கள்.
குழந்தைகளைப் பாதிக்கும் லைஃப் ஸ்டைல் நோய்கள்
Published on

குழந்தை அதன் வயதுக்கேற்ற உயரம், உடல் எடையுடன் இருக்கிறதா என்பதை எப்போதும் கவனியுங்கள். வயதுக்கு அதிகமான உடல் எடை என்பது ஒபிஸிட்டி பிரச்சனையாகவும் இருக்கலாம். குழந்தைகளுக்கு ஒபிஸிட்டி பிரச்சனை ஏற்பட உடலில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள், பாரம்பரியம் உட்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும் முக்கியமான காரணம். ஆரோக்கியமான உணவுகள், விளையாட்டு, போதுமான உறக்கம் இவை குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் நிறைய ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுகிறார்கள். ஃபாஸ்ட் ஃபுட்கள், பீஸா, பர்கர் போன்ற சாட் ஐட்டங்கள், ப்ரெசர்வேட்டிவ்ஸ் எனும் பதப்படுத்திகள் சேர்க்கப்பட்ட உணவுகள், ப்ராசஸ்டு உணவுகள், செயற்கையான சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகள், கார்ன் சிரப், சுகர் சிரப் போன்ற அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள், கோலா போன்ற கார்போனேட்டட் பானங்கள், சாக்லேட்ஸ், செயற்கையான பழரசங்கள் என ஆரோக்கியமற்ற உணவுகளைத்தான் பெரும்பாலான குழந்தைகள் இன்று உண்கிறார்கள்.

இவை எதுவுமே ஆரோக்கியமான உணவுகள் இல்லை. இந்த உணவுகள் உடலில் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பை உருவாக்கி தொப்பை, உடல் பருமனை உருவாக்குகிறது. மறுபுறம், இன்றைய குழந்தைகளில் பலரும் ஓடியாடி விளையாடுவதே இல்லை. எந்நேரமும் படிப்பு படிப்பு என்று மாய்ந்து மாய்ந்து படித்துக்கொண்டே இருப்பதால் உடல் உழைப்பே இல்லாமல் போகிறது. குழந்தைகளுக்கு உடற்பயிற்சி என்பதும் உடல் உழைப்பு என்பதும் விளையாட்டுதான். இன்று பல பள்ளிகள் பி.டி. பீரியட் எனும் விளையாட்டுப் பயிற்சியே இல்லாமல் இருக்கிறது.

குழந்தைகள் உறங்கும்போதுதான் அவர்கள் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு, குழந்தை வளர்வதற்கான முக்கியமான செயல்பாடுகள், க்ரோத் ஹார்மோனின் இயக்கம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். போதுமான தூக்கம் இல்லாது போகும் குழந்தைகளுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்பட்டு வளர்ச்சிக் குறைபாடு மற்றும் கொழுப்புச்சத்து சேர்வதால் உடல் பருமன் ஆகிய நோய்கள் ஏற்படக்கூடும். எனவே, போதுமான அளவு தூங்குவதற்கான வாய்ப்பையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியம்.

பொதுவாக, இந்தக் கால குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் எனும் பிரச்சனை ஏற்பட ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, உணவுகள் போன்ற சமூகக் காரணங்களே அதிகமாக இருக்கிறது. மன அழுத்தம் இன்றைய குழந்தைகளின் பால்யம் நம் காலத்தின் பால்யத்தைப் போல சுதந்திரம் நிறைந்தது அல்ல. பல குழந்தைகள் இன்று அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக அதிகாலைலேயே எழுந்து படிக்கிறார்கள். பிறகு பள்ளிக்குச் சென்றும் படிக்கிறார்கள். இரவு வீடு திரும்பி நள்ளிரவு வரை படிக்கிறார்கள்.

இப்படி, இடைவெளியின்றி விளையாடப் போகாமல், ரிலாக்ஸ் செய்யாமல் படிப்பு படிப்பு என்று அதிலேயே ஈடுபடும்போது மனச்சோர்வு ஏற்படுகிறது. சில சமயங்களில் இந்த சோர்வு மன அழுத்தமாக மாறும்போது அது உடலைப் பாதிக்கிறது இதனாலும் சில குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. எந்நேரமும் படிப்பு படிப்பு என இல்லாமல் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற அவுட்டோர் விளையாட்டுகளை விளையாட அனுமதிப்பது. அவர்கள் உடல், மனவளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com