

உடலின் அடிப்படை கட்டமைப்பு, அதன் செயல்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொண்டால், தோள், முழங்கை, மணிக்கட்டு, மூட்டு, இடுப்பு, கணுக்கால், பாதம், தலை, முதுகு ஆகியவற்றில் ஏற்படும் வலிகளுக்கு, தீர்வு காணலாம். இயங்கா நிலையில் வாழ்வது முழுமையான வாழ்க்கையல்ல. வலியை உணராமல் இருக்க மட்டும் தீர்வு காணும் நாம், நம் உடல் கட்டமைப்பில், மாற்றம் ஏற்பட்டால், அதைக் கண்டு கொள்வதில்லை. அதை சரி செய்தால் மட்டுமே, வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
உதாரணமாக, முதுகு வலி ஏற்பட்டால், மாத்திரை சாப்பிடுவது, இடுப்புப் பட்டை போட்டுக் கொள்வது, பாதிப் படைந்த முதுகுக்கு ஏற்ப, மெத்தை அமைத்துக் கொள்வது, முதுகை சாய்க்க, நாற்காலியை பிரத்தியேகமாக வடிவமைப்பது என, எல்லாவற்றையும் செய்து கொள்கிறோம். ஆனால், இவை எதுவும் தீர்வாக அமையாது. முழு ஈடுபாட்டுடன், முயற்சி செய்து மீள்வது ஒன்றே தீர்வு.
வலி ஏற்பட்டால், உடல் பலம் குறைந்து விட்டதென்றோ, வாழ்வதற்குத் தேவையான திறனை இழந்து விட்டதாகவோ கருத முடியாது. உடல் அசைவு இல்லாததால் ஏற்படும் கோளாறுக்கான அறிகுறி தான், வலி என்பதை உணர வேண்டும்.
உடலின் ஒரு பகுதியில் வலி ஏற்பட்டால், அந்த பகுதியில் தான் பிரச்சினை என்று கருதக் கூடாது. உதாரணமாக, உங்கள் கழுத்திலோ, மூட்டிலோ வலி இருந்தால், குறிப்பிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கருதுவது தவறு. இடுப்புப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்; எனவே, இடுப்புப் பகுதியில் உள்ள பாதிப்பை சரி செய்தால், கழுத்திலோ, மூட்டிலோ ஏற்பட்டுள்ள, வலியை சரி செய்யலாம்.