உங்கள் மதிய உணவு ஆரோக்கியமானது தானா?

இன்றைக்குப் பெரும்பாலானவர்களின் மதிய உணவு திட உணவுகளே. லஞ்சுக்கு எதைச் சாப்பிடலாம், எதைத் தவிர்க்கலாம், எந்த உணவு செரிமானம் எளிதாக நடைபெற உதவும்... பார்க்கலாமா?
உங்கள் மதிய உணவு ஆரோக்கியமானது தானா?
Published on

இன்றைக்குப் பெரும்பாலானவர்களின் மதிய உணவு திட உணவுகளே. அதையும் வயிறுமுட்டச் சாப்பிடுவார்கள். லஞ்சுக்கு எதைச் சாப்பிடலாம், எதைத் தவிர்க்கலாம், எந்த உணவு செரிமானம் எளிதாக நடைபெற உதவும்... பார்க்கலாமா?

மதிய உணவில் சாப்பிட ஏற்றவை... கூடாதவை :

* பாலீஷ் செய்யப்பட்ட அரிசியைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஏனெனில், அரிசியை சுத்தப்படுத்த பலவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அரிசி வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நிலைகளில் திரும்பத் திரும்ப பாலீஷ் செய்யப்படுகிறது. இந்த வகை அரிசியில் சத்துக்கள் எதுவும் இருக்காது. மாறாக, உடலுக்கு ஊறுவிளைவிக்கும் ரசாயனங்களே அதிகம் இடம்பெற்று இருக்கும். அதனால் இதைச் சமைத்துச் சாப்பிடுவதால் எந்தவிதப் பலனும் இல்லை.

* கைகுத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம். உடலுக்குத் தேவையான சத்துகள் இயற்கையாகவே இதில் நிறைந்திருக்கின்றன. இதைச் சாப்பிடுவதால், உடல் வலிமை பெறும்.

* `வெரைட்டி ரைஸ்’ என்று நாம் செய்யும் புளியோதரையோ, எலுமிச்சை சாதமோ, தக்காளி சாதமோ... இவற்றில் சிறிது பூண்டு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய் ஆகியவற்றைக் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும். வெரைட்டி ரைஸ் சாப்பிடும்போது, அதன் வறட்டுத் தன்மையால் தொண்டையில் இறங்காமல் இருக்கும். இதன் காரணமாக, அதிகமாகத்  தண்ணீரைக் குடிக்கவேண்டி இருக்கும். சாப்பாட்டுக்கு இடையில் தண்ணீர் குடித்தால், செரிமானம் சீராக இருக்காது. எனவே, கலந்த சாதம் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக தண்ணீர் அருந்திவிடுவது நல்லது.

* வரகு, திணை, சிவப்பரிசி, கம்பு, ராகி போன்ற தானியங்களில் வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடுவது புத்துணர்ச்சி கிடைக்க வழிவகுக்கும்.

* `பசிக்கும்போது எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டுவிடு’ என்பார்கள் பெரியவர்கள். அதுதான் நல்லது. ஆனால், நம் உடலுக்குத் தேவைப்படும் அளவைவிட உணவு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* மதிய உணவில் அதிக அளவு நீர்ச் சத்துள்ள காய்களை சேர்த்துக்கொள்ளலாம் பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்றவை நம் உடலுக்கு நலம் பயக்கும் நீர்ச்சத்துள்ள காய்கள்.

* எண்ணெயில் செய்யப்படும் பொரியல்களைத் தவிர்க்கலாம். அதிக அளவில் அவியல், கூட்டு போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்..

* காலை உணவுக்குப் பின்னர் சிலர் நொறுக்குத்தீனி, டீ, ஜூஸ்... எனக் கண்டதையும் சாப்பிடுவார்கள். இது மதிய உணவைத் தள்ளிப்போடச் செய்யும் அல்லது நாம் சாப்பிடும் மதிய உணவின் அளவைக் குறைத்துவிடும். எனவே, காலை உணவுக்கும் மதிய உணவுக்குமான இடைவேளையில் நொறுக்குத்தீனியைக் குறைத்துவிடுவது சிறந்தது.

* மதிய உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியம். நம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கும்.

* சிக்கன், மீன் போன்றவற்றையும் மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சாப்பிட்டது செரிமானம் ஆக தேவையான நேரம் கிடைக்கும். அசைவ உணவுகளான மீன் வறுவல், பிரியாணி போன்றவற்றைச சாப்பிட மதிய நேரமே ஏற்றது..

* சிலர் சாப்பிட்டு முடித்தவுடனேயே சிகரெட், பீடி புகைப்பார்கள். இது ஆரோக்கியத்துக்குக் கேடு... தவிர்த்துவிடவேண்டிய பழக்கம்.

* மதிய உணவில் சமைத்த உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. சாலட், பழச்சாறு போன்றவற்றையும் சாப்பிடலாம்.

* மைதாதாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நாண் போன்றவற்றுக்கு மதிய வேளையில் `நோ’ சொல்லுங்கள். அதற்குப் பதிலாக கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

* மதிய உணவில் அவசியம் இடம்பெறவேண்டிய ஒன்று, ரசம். இது, செரிமானம் சீராக நடைபெற உதவும். ரசத்தைப் போலவே சூப்பும் மதியம் சாப்பிடச் சிறந்தது.

* தயிர் சாப்பிடுவது புத்துணர்ச்சி கிடைக்க வழிவகுக்கும். எனவே, தயிரைச் சேர்த்துக்கொள்ளலாம். செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், தயிர் ஆகாது என்பவர்கள் நீர்த்த மோரைச் சேர்த்துக்கொள்ளலாம்.

* அனைத்து வகைக் கீரைகளையும், காய்களையும், பயறுகளையும் மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com