

இவை இரண்டும் தனித்துவமான சுவை, ஆரோக்கிய நன்மைகளை கொண்டவை. இருப்பினும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், காலை உணவாக இட்லியை சாப்பிடலாமா, தோசையை உட்கொள்ளலாமா? என்று குழப்பமடைகிறார்கள். எது சிறந்த உணவு என்று பார்க்கலாமா?
இட்லி வயிற்றுக்கு இதமானவை. ஆனால் பருப்பு மற்றும் நார்ச்சத்து கொண்ட சாம்பாருடன் சேர்த்து சாப்பிடாத பட்சத்தில், சாப்பிட்ட ஓரிரு மணி நேரங்களிலேயே பசி ஏற்படக்கூடும்.
தோசை மொறுமொறுப்பானவை, அளவில் பெரியவை. வயிற்றை நிறைவாக வைத்திருக்கக்கூடியவை, பன்னீர், முளைகட்டிய பயறுகள் அல்லது காய்கறிகளை சேர்த்து விரும்பியபடி தோசை தயாரிக்கலாம். அப்படி தயாரிக்கப்படும் தோசைகளை சாப்பிடுவது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும்.
பாசிப்பருப்பு மற்றும் பன்னீர் பூரணம் கொண்டு தயாரிக்கப்படும் தோசையை உட்கொள்வது புரதச்சத்தை அதிகரிக்க உதவிடும். உடல் எடையை கட்டுப்படுத்தவும் ஏற்றது.
இட்லி புளிக்கவைக்கப்பட்டு நீராவியில் வேகவைக்கப்படுவதால், எளிதில் செரிமானமாகும் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்களில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு ஏற்றது.
தோசையிலும் புளிக்கவைத்தல் செயல்முறை நடப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு உதவிடும். ஆனால் அதில் பயன்படுத்தப்படும் எண்ணெய் காரணமாக இட்லியை விட செரிமானமாகுவதற்கு சற்று கடினமாக இருக்கும்.
இட்லியில் கிளைசெமிக் குறியீட்டு அளவு குறைவு. அதாவது. ரத்தத்தில் சர்க்கரை அளவை மிக மெதுவாகவே உயர்த்தும். ஆனால் தோசையின் கிளைசெமிக் குறியீடு மிக அதிகம், அரிசி அதிகமாக பயன்படுத்தப்பட்டு, அதிக எண்ணெய்யும் சேர்க்கப்படும்போது இன்னும் அதிகரிக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றவாறு கிளைசெமிக் அளவை குறைக்க கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ் அல்லது சிறுதானியங்களை பயன்படுத்தி தோசை வார்க்கலாம்.
இட்லி புரதச்சத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் இல்லை. இருப்பினும் சாம்பாருடன் சேர்த்து உண்ணும்போது புரதம் மற்றும் நார்ச்சத்து கிடைத்துவிடும்.
தோசையில் புரதச்சத்தை அதிகரிக்க அரிசிக்கு மாற்றாக கேழ்வரகு பயன்படுத்தலாம். பாசிப்பருப்பு, பன்னீர், முளைக்கட்டிய பயறுகளை தோசைக்குள் சேர்த்து சுருட்டி சூடாக்கி சுவைக்கலாம். இது தோசையை சமச்சீரான, புரதம் நிறைந்த உணவாக மாற்றும்.
காலை உணவுகளில் பெரும்பாலும் புரதச்சத்து குறைவாகவே இருக்கும். தோசையில் பல்வேறு ஊட்டச்சத்து பொருட்களை சேர்ப்பதன் மூலம் இந்த பற்றாக்குறையை சரிசெய்யலாம்.
ரவா இட்லி, மசாலா இட்லி அல்லது பொடி தடவிய மினி இட்லிகள் உள்பட இட்லியில் ஏராளமான வகைகள் உள்ளன. பேப்பர் தோசை முதல் அடை தோசை வரை தோசையிலும் பல வகைகள் உள்ளன. சுவை விருப்பங்களுக்கு ஏற்ப, தோசையின் மாவிலும், உள்ளே வைக்கப்படும் பூரணத்திலும் எண்ணற்ற மாற்றங்களை செய்யலாம்.
அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து இரவு முழுவதும் புளிக்க வைக்கும் ஒரே செயல்முறை தான் இட்லி, தோசைக்கு பின்பற்றப்படுகின்றன. இந்த புளிக்கவைக்கும் செயல்முறை குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும். உடல் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்ச உதவும்.
இட்லி நீராவியால் வேகவைக்கப்படுகிறது. ஆனால் தோசை வார்க்கும்போது எண்ணெய் அல்லது நெய் தடவப்படுகிறது.
ஒரு சாதாரண இட்லியில் (35 முதல் 50 கிராம்) சுமார் 40 முதல் 50 கலோரிகள் உள்ளன. நீராவியில் வேகவைக்கப்படுவதால் கொழுப்பு குறைவாக உள்ளது. எண்ணெய் இல்லாமலேயே ஊட்டச்சத்துக்கள் தக்க வைக்கப்படுகின்றன.
ஒரு சாதாரண தோசையில் (80 முதல் 100 கிராம்) சுமார் 100 முதல் 120 கலோரிகள் உள்ளன. தோசை வார்க்கும்போது எண்ணெய் அல்லது நெய் மாவில் உறிஞ்சப்படுவதால் இந்த கலோரி வித்தியாசம் ஏற்படுகிறது.
நீராவியில் வேகவைக்கப்படும் இட்லிகள் எளிதில் செரிமானமாகக்கூடியவை, ஊட்டச்சத்து நிறைந்தவை. கலோரிகள் குறைவாக உள்ள உணவை சாப்பிட விரும்புபவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு இட்லியை தேர்ந்தெடுக்கலாம்.
குறைந்த கலோரி அளவு, எளிதில் செரிமானமாகும் தன்மை மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இட்லியே காலை நேர சிறந்த உணவாக அமைந்திருக்கிறது.