இதயநோய் வருவதற்கான காரணமும்.... தீர்க்கும் வழிமுறையும்..

இதய நோய் ஏற்படுவதற்கு வாழ்க்கைமுறையும், உணவு பழக்கவழக்கங்களும் முக்கிய காரணமாக இருக்கின்றன. இளம் பருவத்தினர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.
இதயநோய் வருவதற்கான காரணமும்.... தீர்க்கும் வழிமுறையும்..
Published on

இந்தியாவில் ஆண்டுதோறும் இதய நோய்களால் 30 லட்சம் பேர் இறக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளம் வயதினரும் மாரடைப்புக்கு ஆளாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைமுறையும், உணவு பழக்கவழக்கங்களும் அதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இளம் பருவத்தினர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

ஆரோக்கியமான உடல் எடையை தீர்மானிப்பதில் கொழுப்பு, குளுக்கோஸ், ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு முக்கிய பங்கு இருக்கின்றன. அவை சீராக இருப்பதற்கு சத்தான தானிய உணவு வகைகளை தினமும் சாப்பிட வேண்டும்.

இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுவதற்கு வாரத்தில் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியோ செய்து வருவது அவசியமானது. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் மேற்கொள்வது ரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு போன்ற பாதிப்புகளிலிருந்து உடலை பாதுகாக்கும். இதயத்திற்கும் நலம் சேர்க்கும்.

புகைப்பழக்கம் இதய நோய் பாதிப்பை மூன்று மடங்கு அதிகப்படுத்திவிடும்.

மாரடைப்பு ஏற்படுவதற்கு மரபணு ரீதியிலும் தொடர்பு இருக்கிறது. தந்தையோ அல்லது சகோதரரோ 55 வயதுக்குள் மாரடைப்பு பாதிப்புக்கு ஆளாகி இருந்தால், அது முதல் தலைமுறையை சேர்ந்த ஆணுக்கு 50 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

மன அழுத்தத்திற்கும், மாரடைப்புக்கும் நேரடி தொடர்பு இல்லை. எனினும் திடீரென்று மன அழுத்தம் அதிகரிக்கும்போது இதய நோய் சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும்.

ரத்த அழுத்தத்தையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் அடிக்கடி சரிபார்த்து வர வேண்டும். அவ்வாறு சரிபார்த்து அவைகளை சீராக வைத்துக்கொள்வது இதய நோய் பாதிப்பிலிருந்து விடுவிக்க வழிவகை செய்யும்.

X

Maalai Malar
www.maalaimalar.com