search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் `நவரா அரிசி
    X

    ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் `நவரா' அரிசி

    • ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
    • அரிசியில் நூற்றுக்கணக்கான வகைகள் இருக்கின்றன.

    இந்திய உணவு வகைகளில் பல நூற்றாண்டுகளாக அரிசி முக்கிய அங்கம் வகிக்கிறது. அரிசியில் நூற்றுக்கணக்கான வகைகள் இருக்கின்றன. அவற்றுள் வெள்ளை, பழுப்பு நிற அரிசிதான் பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது. அதிலும் வெள்ளை நிற அரிசிதான் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. பாரம்பரிய அரிசி ரகங்கள் ஏராளம் உள்ளன. ஆனால் அவற்றின் பயன்பாடு குறைவாகவே உள்ளது. இப்போது பாரம்பரிய அரிசி வகைகளின் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து பலரும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.

    அவற்றுள் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சிறந்த அரிசிகளில் ஒன்றாக `நவரா' அரிசி விளங்குகிறது. இது கேரளாவை பூர்வீகமாக கொண்டது. பாலீஷ் செய்யப்படாத அரிசியான இது, சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கும்.

    உணவாக மட்டுமல்லாமல் ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அரிசி உடலுக்கு உடனடி ஆற்றலையும், ஊட்டச்சத்தையும் அளிக்கக்கூடியது. அதனால் நோயாளிகளுக்கு சிறந்த உணவாக இது அமைகிறது. ரத்தம், எலும்புகள், தசைகள் என உடலின் அனைத்து திசு அமைப்புகளுக்கும் வலு சேர்க்கக்கூடியது.

    மெலிந்த தேகம் கொண்டவர்கள், பலவீனமான, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், காய்ச்சலில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு ஏற்றது.

    நீரிழிவு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த அரிசி பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுர்வேதம் இந்த அரிசியை தினமும் சாப்பிடுமாறு வலியுறுத்துகிறது. ஏனெனில் இந்த அரிசி பசியைத் தூண்டும், உடல் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். ஆயுர்வேதத்தில் மூட்டுவலி, வாத நோய், பக்கவாதம் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

    நீரிழிவு நோயாளிகள் இந்த அரிசியை குறைவாக உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்காணித்து அதற்கேற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளலாம்.

    இந்த அரிசியுடன் தண்ணீர் அல்லது பால் சேர்த்து சமைத்து ஊட்டமளிக்கும் கஞ்சியாகவும் உட்கொள்ளலாம். வெல்லம் அல்லது தேனுடன் லவங்கப்பட்டை, ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களை சேர்த்தும் சுவைக்கலாம். பிரியாணி, புலாவ் செய்வதற்கு பயன்படுத்தும் அரிசிக்கு மாற்றாக உபயோகிக்கலாம்.

    இந்த அரிசியில் தயாராகும் கூழ் பல்வேறு நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான உணவாகவும் கருதப்படுகிறது. நரம்பு கோளாறுகளை குணப்படுத்துவதற்கான கேரள பாரம்பரிய மருத்துவத்தில் இந்த அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது.

    நவரா அரிசியின் நன்மைகள்:

    * உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

    * செரிமானத்திற்கு உதவும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.

    * உடல் மெலிவதை தடுக்கும்.

    * முடக்கு வாதத்தை குணப்படுத்த பயன்படுகிறது.

    * ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ரத்த சோகையை குணப்படுத்தும்.

    * எலும்புகளை பலப்படுத்தும். ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வராமல் தடுக்கும்.

    Next Story
    ×