என் மலர்
பொது மருத்துவம்

குங்குமப்பூவில் குவிந்திருக்கும் நன்மைகள்...
- குங்குமப்பூவுக்கும் சிவப்பு நிறத்துக்கும் தொடர்பே கிடையாது.
- குங்குமப்பூவை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
'சிவப்பு தங்கம்' என பிரபலமாக அறியப்படும் குங்குமப்பூ, உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலாப் பொருளாகும். இது, குரோகஸ் சட்டிவஸ் எனப்படும் மலரில் இருந்து கிடைக்கிறது.
நமக்கு தெரிந்த இந்த குங்குமப்பூ, குரோகஸ் பூக்களின் உலர்ந்த ஆரஞ்சு-சிவப்பு சூலகமுடி ஆகும். குங்குமப்பூ செடி, மத்திய தரை கடல் பகுதிகளில் தோன்றியதாக நம்பப்படுகிறது.
குங்குமப்பூவில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். கர்ப்பிணிகளுக்கு குங்குமப்பூவை ஏன் தருகிறார்கள் தெரியுமா?
குங்குமப்பூவுக்கும் சிவப்பு நிறத்துக்கும் தொடர்பே கிடையாது. பாலில் குங்குமப் பூவைப் போடும்போது பாலின் நிறம் மாறுகிறது என்பதற்காக, அதைச் சாப்பிடுவதால் குழந்தையும் அந்த நிறத்தில் பிறக்கும் என்பது அர்த்தமில்லை. இது முற்றிலும் தவறான நம்பிக்கை.
ஆனால், குங்குமப்பூவுக்கு ஒரு வாசனைப் பொருளாக நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக, இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.
இனிப்புச் சுவையுள்ள நறுமணப் பொருட்களான குங்குமப்பூ, அதிமதுரம் போன்றவை குழந்தையின் வளர்ச்சிக்கு துணைபுரியக் கூடியவை. குங்குமப்பூ, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால் மனஅழுத்தம் குறையும். எனவேதான், கர்ப்பிணிப் பெண்கள் நல்ல மனநிலையில் இருக்க குங்குமப் பூவை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இப்படி பல காரணங்களுக்காகவே, கருவுற்ற பெண்ணுக்கு குங்குமப்பூ, அதிமதுரம் போன்றவற்றை வழங்கும் சடங்கு இன்றும் பல இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊறவிடவும். குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
குங்குமப்பூவை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அதனால் குறைவான அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
குங்குமப்பூ உபயோகப்படுத்தும் முறை:
குங்குமப்பூவை சிறிதளவு சூடான பாலில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கையால் நசுக்கிவிட்டு பாலோடு கலந்து குடிக்கலாம்.
குங்குமப்பூவை பொடி செய்யும் முறை:
ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும். நன்கு சூடானதும் அடுப்பை அணைத்து விடவும். அந்த வாணலியில் குங்குமப்பூவை போட்டு வைக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து கையால் நசுக்கி பொடி செய்யவும். இதை ஒரு சிறிய டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.