எதனால் கோபம் வருகிறது தெரியுமா?

தினமும் காலை எழுந்ததும் ஓர் ஐந்து நிமிடம் இன்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படமாட்டேன் என மனதளவில் தயாராக இருந்தாலே, கோபத்தைப் பெரிதும் தவிர்த்துவிடலாம்.
கோபம்
கோபம்
Published on

கோபம் ஏன் வருகிறது? பரிணாமரீதியாக பார்த்தால் இரண்டு காரணங்களை சொல்கிறார்கள் அறிவியலாளர்கள். முதல் காரணம், கோபம் என்பது ஒரு விலங்கு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்ளவும் இரை தேடல், இணை தேடல் போன்ற விஷயங்களில் தனக்கு போட்டியாக வருபவர்களை பயமுறுத்தி விரட்டவும் உருவான ஒரு செயல்.

இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்றால், அவரை நமது வழிக்குக் கொண்டுவர உதவும் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கலாம். ஆக, எல்லா கோபத்துக்கு பின்னாலும் ஒரு ஏமாற்றம் இருக்கிறது. கோபத்தின்போது மூளையில் பல வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கோபம் அதிகம் வரும்போது உணர்வுப்பூர்வமான நிலையில் அறிவுப்பூர்வமாக யோசிக்கும் திறன் வெகுவாக குறைந்து விடுகிறது.

கோபத்தை குறைப்பதற்கும் அடுத்து என்ன செய்யலாம் என அறிவுப்பூர்வமாக யோசிப்பதற்கும் மூளையில் சில பகுதிகள் உள்ளன. மன அழுத்தம், விபத்து, மூளையில் ஏற்படும் நோய்கள், மது போன்றவை மூளையின் கோபத்தை கட்டுப்படுத்தும் பகுதியை பாதிக்கின்றன. அதனால் சிறு விஷயங்களுக்குக்கூட கட்டுப்படுத்த முடியாமல், ஏன் காரணமே இல்லாமல்கூட கடுங்கோபம் ஏற்படுகிறது. கோபப்படும்போது உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்தம் எகிறும். இதயம் கண்டபடி துடிக்கும். கோபம் வரும்போது உடல் கொதிக்கத்தான் செய்கிறது. அதனால் தான் ‘ஆறுவது சினம்’ என அவ்வையார் கூறினார்.

அளவுக்கு அதிகமான கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தை தருகின்றன. எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஏற்க தொடங்கினாலே பாதி கோபம் குறைந்துவிடும். வீட்டினுள் நுழைந்ததும் நாற்காலி இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார் ஒருவர். அவ்வாறு இல்லை என்றவுடன் உடனே ஏமாற்றம் வந்து கோபமாக வெடிக்கிறது. இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டால் ஏமாற்றமும் வராது. கோபமும் வராது.

இன்னொரு முக்கியமான விஷயம் கோபம் என்பது அனிச்சையாக நடைபெறும் ஒரு பழக்கம். சூடான பாத்திரத்தை தொட்டவுடன் கை அனிச்சையாக பின்செல்வதுபோல், ஒரு நிகழ்வு நடந்ததும் யோசிக்காமல் அனிச்சையாகக் கோபப்பட்டு பலரும் பழகியிருக்கிறோம். தினமும் காலை எழுந்ததும் ஓர் ஐந்து நிமிடம் இன்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படமாட்டேன் என மனதளவில் தயாராக இருந்தாலே, கோபத்தைப் பெரிதும் தவிர்த்துவிடலாம். ‘ஆத்திரமடையும் ஒவ்வொரு நிமிடமும் நாம் அறுபது விநாடி மகிழ்ச்சியை இழக்கிறோம்’ என எமர்சன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதானே. அதற்காக கோபம் என்பதே கூடாதா எனக் கேட்டால், அதுதான் இல்லை. நியாயமான காரணங்களுக்காக சரியான முறையில் கோபம் கொள்ளவே வேண்டும். அதுதான் உண்மையான நலம் தரும் நான்கெழுத்தான சமநிலை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com