குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த என்ன செய்யலாம்?

தினசரி குழந்தை தூங்கப் போகும் முன் ஒர் புத்தகத்தை படித்து காட்ட வேண்டும்.குழந்தையின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கதை சொல்ல வேண்டும்.
குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த என்ன செய்யலாம்?
Published on

குழந்தைகளிடம் சிறுவயதிலேயே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் அறிவை விரிவாக்கும், உலகம் பற்றிய தெளிவான பார்வையை ஏற்படுத்தும். எல்லாவற்றுக்கும் மேலாக சமூக ஊடக பிடியில் இருந்து அவர்களை விடுவிக்கும். சரி பெற்றோர்கள் குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

குழந்தைகளின் மழலைப் பருவத்தில் இருந்தே அவர்களை புத்தக வாசகராக பெற்றோர் வளர்க்க முடியம். தினசரி குழந்தை தூங்கப் போகும் முன் ஒரு சிறுவர் கதை புத்தகத்தை அவர்களுக்கு படித்துக்காட்ட வேண்டும். அல்லது பெற்றோர் தாம் படித்த கதையை கூற வேண்டும்.

குழந்தையின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், அவர்கள் கேள்வி எழுப்பும் வகையிலும் கதை சொல்ல முயல வேண்டும். இப்படிச் செய்யும் போது, குழந்தைகளுக்கு இயல்பாகவே புத்தகங்கள் மீது ஆர்வம் பிறக்கும்.

குழந்தைகளை என்னதான் சொல்லி வளர்த்தாலும், பெற்றோர்கள் செய்யும் செயலைப் பார்த்துதான் அவர்கள் வளர்கின்றனர். அதைத்தான் மீண்டும் செய்கின்றனர். அந்த வகையில் பெற்றோர், புத்தகம், நாளிதழ் படிப்பதாக இருந்தால் குழந்தைகளின் கண் முன் வாசிக்க வேண்டும்.

தினமும் பெற்றோர்களின் வாசிப்பு பழக்கத்தை பார்க்கும் குழந்தைகள், தாமாகவே புத்தகத்தை எடுத்து புரட்டத் தொடங்குவார்கள்.

குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்துச் சென்றால், நிறைய புத்தகங்களை ஒரே இடத்தில் பார்க்கும்போது அவர்களுக்கு ஆச்சரியமாகவும், ஆசையாகவும் இருக்கும். வீட்டுக்கு அருகே உள்ள நூலகத்துக்கு பெற்றோர் தமது குழந்தையை வாரத்துக்கு ஒருமுறையாவது கூட்டிச் சென்றால், நூலகத்தில் அமர்ந்து படிப்பவர்களை பார்த்தும் புத்தகங்களை பார்த்தும் வாசிப்பு பழக்கம் வரத் தொடங்கும்.

புத்தகத்தில் ஒரே கதையை மீண்டும் மீண்டும் படித்து காட்டுவது பெற்றோருக்கு அயர்வை ஏற்ப ஏற்படுத்தலாம். ஆனால் குழந்தை அதை விரும்பிக் கேட்க வாய்ப்பு உள்ளது. எப்படி ஒரு பாடலை திரும்பத் திரும்ப கேட்டு குழந்தைகள் உற்சாகம் அடைகிறார்களோ அதைப் போலத்தான் இதுவும் குழந்தைகள் கதையிலோ, படங்களிலோ முதன்முதலில் தவறவிட்ட விஷயங்களை கண்டுபிடிக்க விரும்புவார்கள்.

அதனால், அவர்களின் கவனத்தை பெறவும், புத்தக வாசிப்பில் சலிப்பு தட்டாமல் இருக்கவும், அவர்களுக்கு பிடித்த கதைகளை மீண்டும் சொல்லிக் காட்ட அல்லது வாசிக்க வைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எந்த மாதிரியான புத்தகங்களை கொடுக்கிறோம் என்பதை போல, எந்த இடத்தில் புத்தகம் படிக்கிறோம் என்பதும் முக்கியம். புத்தகம் வாசிக்கும்போதோ அல்லது குழந்தைக்கு கதை சொல்லும்போதோ, அறையில் விளையாட்டுப் பொருட்கள், இரைச்சல் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கவனம் முழுவதும் புத்தகத்தின் மேல் இருப்பது போன்ற சூழலை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும்.

குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற எளிய, பெரிய எழுத்தில், படங்கள் அதிகம் கொண்ட புத்தகங்களை ஆரம்பத்தில் அவர்களுக்கு பெற்றோர் படிக்க கொடுக்க வேண்டும். அவர்கள் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தால் அதை பாராட்டி, பரிசு கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com