search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    சுட்டெரிக்கும் வெயில்... நண்பர்களுடன் ஓடியாடி விளையாடும் குழந்தைகள்
    X

    சுட்டெரிக்கும் வெயில்... நண்பர்களுடன் ஓடியாடி விளையாடும் குழந்தைகள்

    • கோடை காலத்தில் குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • கோடை காலத்தில் சாப்பிடும் உணவுகள் விஷத்தன்மையாக மாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன

    வெயிலோடு உறவாடி....

    வெயிலோடு மல்லுக்கட்டி

    ஆட்டம்போட்டோமே....

    இந்த பாடல் வரிகள் கிராமப்புற சிறுவர்களின் வாழ்வியலை அப்படியே படம்பிடித்து காட்டியிருந்தது.

    கோடை விடுமுறை விட்டால்போதும், குழந்தைகள் வீட்டை துறந்து, வெயிலை மறந்து நண்பர்களுடன் காடு....கரையெல்லாம் ஓடியாடி விளையாட சென்றுவிடுவார்கள்.

    வீட்டில் உள்ள பெரியவர்கள், இப்படி வெயிலில் விளையாடுகிறாயே உடம்புக்கு ஏதாவது ஆகிவிடப்போகுது என்பார்கள். அதையெல்லாம் பிள்ளைகள் ஒரு பொருட்டாக கருதியது இல்லை.

    பொதுவாக வெயில் காலத்தில் நமக்கு தெரிந்த நோய் என்பது வியர்க்குரு உள்ளிட்ட தோல் நோய்களும், வயிற்றுப்போக்கு, நீர்க்கடுப்பு போன்ற சில நோய்களும்தான்.

    இதையெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள், 'சூட்டுனால வருது... நல்லெண்ணெய் போடு சரியாகிவிடும் என்பார்கள்'.

    இதைத்தாண்டி, கோடை காலத்தில் சாப்பிடும் உணவுகள் விஷத்தன்மையாக மாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் சூடான, ஈரப்பதமான கால நிலையால் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமி மற்றும் ரசாயான நச்சுக்கள் உண்ணும் உணவு மூலம் உடலுக்குள் புகுந்து, வயிற்று கோளாறுகள், குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

    இது தவிர வெப்பம் மிகுதியால் வரும் கண்நோய்கள். இந்த நோய்கள் வந்தால், ஒருவித வைரஸ் தொற்றால் இமைகளின் வெளிப்புற சவ்வு மற்றும் உள் கண்ணிமை பாதித்து விடும். இதனால் கண்ணில் ஒருவித கூச்ச உணர்வு ஏற்பட்டு கண்கள் சிவந்து நீர் வடியும்.

    அடுத்ததாக கோடையில் வருகின்ற ஒருவித மனச்சோர்வு. இதனால் ஏற்படும் பசியின்மை, எடை இழப்பு , தூங்குவதில் சிரமம் போன்றவை படாய் படுத்தி விடும். மேலும் கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பு என்பது முக்கிய பிரச்சினை.

    நமது உடலில் உள்ள நீர்த்தன்மைதான் நமது உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன. உடலில் ஓடும் ரத்தமும் நீர்தன்மை வாய்ந்ததே. ஆனால் கோடைக்காலத்தில் நாம் அறியாமலேயே வியர்வையின் மூலம் அதிகளவு நீர் மற்றும் உப்புக்களை இழக்கிறோம்.

    பொதுவாக உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு உட்கொள்ளும் அளவை விட அதிகமாக இருந்தால், அது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது.

    இந்த நீரிழப்பு தன்மை ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால், அவரது வாய் மற்றும் நாக்கு வறட்சியாக மாறும். கடுமையான சோர்வு, பசியின்மை, தலைவலி ஏற்பட்டு விடும். இது தவிர காதுகளுக்கு முன்னால் உள்ள பரோடிட் சுரப்பி பாதிக்கப்படும். இதன் விளைவாக குறிப்பிடத்தக்க வீக்கம், காய்ச்சல் ஏற்படுகிறது. தொடர்ந்து சூடான அனல் காற்றை சுவாசிக்கும்போது, சுவாசப்பாதைகள் சுருங்கி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

    சூரியனில் இருந்து அதிகளவில் வெளிவரும் புற ஊதாக்கதிர்கள் நமது தோல் பகுதியில் ஆபத்தான நோய்களை விளைவிக்கும்.

    இதுபோன்ற கோடைகால நோய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடிய சாதாரண நோய்தான்.

    அதைவிட மிகவும் ஆபத்தானது 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் வெப்ப பக்கவாதம் தான்.

    இதை மருத்துவர்கள் சன் ஸ்ட்ரோக் என்றும் ஹைபர்தர்மியா என்றும் சொல்கின்றனர்.

    அது என்ன 'ஹீட் ஸ்ட்ரோக்'?

    பொதுவாக ஒருவர் கொளுத்தும் வெயிலில் வேலை செய்யும் போது, தலைவலி , தலைச்சுற்றல் மற்றும் பலவீனங்கள் ஏற்படுகின்றது. இதுதான் ஹீட் ஸ்ட்ரோக்கிற்கு முந்தைய அறிகுறி என்கின்றனர்.

    இந்த நிலைகள் தொடரும்போது, இருதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகள செயலிழப்பு, சுயநினைவின்மை ஏற்பட்டு விடும். அப்புறம் என்ன....மரணம்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு, மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற 23 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுவும் ஹீட் ஸ்ரோக் மூலம் ஏற்பட்ட இழப்பு என்றே கருதப்படுகிறது.

    திடீர் நெஞ்சுவலி போலவே இந்த வெப்ப பக்கவாத நோய் படு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். நன்றாக பேசிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென்று மயக்கமடைந்து சாய்ந்து விட்டால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டது என்று கூறிவிடுகிறோம். அதுபோலவே இந்த நோயும் ஒன்றாக காணப்படுகிறது. இதனால் ஹார்ட் அட்டாக் எது ஹீட் ஸ்ட்ரோக் எது என்று அடையாளம் காண முடியாமல் போய் விடுகிறது.

    நம் உடலின் உள் வெப்பநிலையும், பி.எச் அளவும், எப்போதும் குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும். அப்போதுதான், ரத்தத்திலுள்ள ரசாயனங்கள் அனைத்தும் சரியாக வேலைசெய்யும். ரத்தத்தின் வெப்பம் குறைந்து, குளிர்ந்தநிலைக்குச் சென்றுவிட்டால் ரத்தம் உறையத்தொடங்கி விடும். இது அபாய நிலை.

    நமது உடல் வெப்பநிலையைச் சரியான அளவில் பராமரிக்க, நம் மூளையிலுள்ள ஹைப்போதாலமாஸில் ஒரு தெர்மோஸ்டாட் இருக்கிறது. தேவைப்படும்போது நம் உடலின் வெப்பநிலையைக் குறைத்தும், அதிகப்படுத்தியும் நம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும் வேலையை தெர்மாஸ்டாட் செய்கிறது.

    இந்த தெர்மாஸ்டாட் செயலிழந்துபோகும் நிலைக்குத்தான் ஹீட் ஸ்ட்ரோக் என்று கூறுகின்றனர். இதில் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக், மற்றும் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் என்று இரண்டு வகை.

    எந்த செயல்களிலும் ஈடுபடாமல், சாதாரண சுற்றுப்புறச்சூழலில் இருக்கிற வெப்பத்தின் தாக்கத்தால் மட்டும் ஏற்படுவதுதான் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக். இது உடலில் சூரிய ஒளி படுவதால் மட்டுமே உண்டாகும். பெரும்பாலும் இந்த வகை ஸ்ட்ரோக் வயதானவர்களுக்குத்தான் ஏற்படும். ஆனால் இளவயது காரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இதற்கு அவர்கள் வெயிலில் நீண்ட தூரம் ஓடுவது, விளையாடுவது, அந்த நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களை சொல்லலாம்..

    குழந்தைகளை பொறுத்தவரை தெர்மோஸ்டாட் சுரபி வளர்ச்சியடைந்திருக்காது. அதனால் கோடை காலத்தில் குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்களுக்கு தெர்மோஸ்டாட் செயலிழந்து போயிருக்கும். இது நல்லநிலையில் இருந்தாலும், வெளிப்புற செயல்பாடுகளின் மூலமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே வெயில் காலத்தில் நாம் வெளியே நடமாடுவதில் கவனம் கட்டாயம் தேவை. இல்லை எனில் சுட்டெரிக்கும் வெயிலால் உயிர் குடிக்கும் நோயான ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் உருவாகிவிடும் அல்லவா?

    இதற்காகத்தான் கோடை காலத்தில் சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். நமது உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரின் அளவைவிட 500 மி.லி அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதுபற்றி மருத்துவர்கள் மேலும் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.

    Next Story
    ×