

இந்தியாவில் மட்டுமே, 50 வயதைக் கடந்தவர்கள் 25 சதவிகிதமும், 40 வயதைத் தாண்டியவர்கள், 15 சதவிகிதமும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர் மருத்துவர்கள். வந்த பின்னர் அவதிப்படுவதைவிட, வருவதற்கு முன்னரே காத்துக்கொள்வது, இன்றைய காலகட்டத்துக்கு மிக
அவசியமானது. இதய நோய் வராமல் தடுப்பதற்கு, சில எளிய வழிமுறைகள் உள்ளன.
தூக்கம் நோயை துரத்தும்: அலுவலக பிரச்னையை எப்படி வீட்டுக்குள் கொண்டுவரக் கூடாதோ, அதேபோல், படுக்கைக்கும் பிரச்னைகளைக் கொண்டு செல்லக்கூடாது. தூங்கும்போது எதைப் பற்றியும் நினைக்கக் கூடாது. அது இரவு தூக்கத்தைப் பாதிப்பதுடன், மனதளவில் நமக்கும் தூக்கத்துக்குமான இடைவெளியை பெரிதுபடுத்திவிடும்.
உணவு உண்ட பின், உடனே படுக்கைக்குச் செல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சராசரியாக தினமும் எட்டு மணி நேர தூக்கம் மிக அவசியம். ஆரோக்கியமான உணவுப்பழக்கம், புகை பிடிக்காமை, மது அருந்தாமை, இவற்றுடன் தூக்க நேரத்தையும் சரியாக பின்பற்றினால், இதய நோய், 90 சதவிகிதம் நெருங்க வாய்ப்பே இல்லை.
சிரித்தால் போச்சு: மாரடைப்புக்கும், சிரிப்புக்கும் மறைமுகமான, நெருங்கிய தொடர்புண்டு. ரத்தக்குழாயில் உள்ள கொழுப்புக்கட்டி வெடித்து, ரத்தம் உறைந்து ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்திவிடும். இதயத்துக்குச் செல்லும் ரத்தம் குறையும்போது மாரடைப்பு ஏற்படும்.
மனம்விட்டுச் சிரிக்கும் போது, நம் உடலில் நன்மை பயக்கும் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்த ஹார்மோன்கள், ரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்புக்கட்டிகளை வெடிக்க விடாமல் செய்துவிடும். அதனால், இனி வாய்விட்டுச் சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
எடைக்கேற்ற நடை அவசியம்: பலரும் சுகவாசிகளாகதான் இருக்கின்றோம். விரும்பிய நேரத்தில் சாப்பாடு, வேண்டிய இடத்துக்குச் செல்ல வாகனம், கை
நிறையச் சம்பளம், மிதமிஞ்சிய ஓய்வு என, ஒருவரது வாழ்க்கையின் முன்பாதி கழிந்தால், நோய் தாக்கிய உடலுடன் மருத்துவமனையில் அல்லாடும் நிலை, வாழ்வின் பின்பாதியில் கண்டிப்பாக இருக்கிறது.
இயந்திர மயமான உலகில் கால்களுக்கு, வேலை கொடுப்பதை மறந்து விட்டோம். காலையில் எழுந்தவுடன், அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவும் குறையும். உணவுக்குப் பின் நடைப்பயிற்சி செய்வதை, கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். உலகிலேயே இந்தியர்கள்தான் சுவைக்கு, முக்கியம் தருவதில் முன்னணியில் இருக்கின்றனர். பிடிக்காத உணவை ஒதுக்கியும், பிடித்ததை அதிகமாக வயிற்றில் கட்டியும், அவதிப்படும் பழக்கத்துக்கு நாம் அடிமையாகி விட்டோம்.