மோடியின் ஃபோனுக்கு தான் வெயிட்டிங்.. வினேஷ் போகத்திடம் பேச துணிவு இருக்கிறதா? - பஜ்ரங் புனியா

பிரதமர் மோடி வினேஷ் போகத்துக்கு ஃபோன் செய்யும் தருணத்திற்கு காத்திருக்கிறேன்வினேஷை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார்.
மோடியின் ஃபோனுக்கு தான் வெயிட்டிங்.. வினேஷ் போகத்திடம் பேச துணிவு இருக்கிறதா? -  பஜ்ரங் புனியா
Published on

ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில், கியூபா வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெற்றிபெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார். தங்கம் யாருக்கு என்று நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியானது இன்று மதியம் 2.30 அளவில் நடக்க உள்ளது.

முன்னதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷண் சிங் வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பலர் டெல்லியில் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் முன்னிலையில் நின்றவர் வினேஷ் போகத். அவர் உள்ளிட்ட மற்றைய வீரர்கள் மீது கடுமையான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டது.

இதனால் அவர் பெற்றுள்ள இந்த வெற்றி அவரை அவமதித்தவர்களுக்கு எதிரான அடி என்று சக விளையாட்டு வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அவருடன் களத்தில் நின்று போராடிய சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது சமூக வலைதள பக்கத்தில், 'பிரதமர் மோடி வினேஷ் போகத்துக்கு ஃபோன் செய்யும் தருணத்திற்கு காத்திருக்கிறேன். அந்த நேரத்தில், அவர் மீண்டும் 'இந்தியாவின் மகள்' ஆகிவிடுவார். டெல்லி ஜந்தர் மந்தரில் நாங்கள் போராடியது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத அவருக்கு, வினேஷ்க்கு ஃபோன் செய்து வாழ்த்தும் துணிவு எப்படி வரப்போகிறது? என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக நேற்று மதியம் நடந்த காலிறுதி போட்டியில் வினேஷ் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து பஜ்ரங் புனியா வெளியிட பதிவில்,'பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடி பெண் சிங்கமாக திகழ்கிறார் வினேஷ் போகத். அவர் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார். ஆனால் இவரை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்' என்று தெரிவித்திருந்தார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com