ராஜாவாக வந்தாரா சிம்பு? - வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் - கேத்தரின் தெரசா நடிப்பில் வெளியாகி இருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் விமர்சனம். #VanthaRajavaathanVaruvenReview #VanthaRajavaathanVaruven #STR
ராஜாவாக வந்தாரா சிம்பு? - வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்
Published on

வெளிநாட்டில் மிகப்பெரிய தொழிலதிபரான நாசரின் மகன் சுமன். அவரது தங்கை ரம்யா கிருஷ்ணன் பிரபுவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஒரு சாதாரண வழக்கறிஞரை திருமணம் செய்து கொள்வதால் அவர்களை ஏற்றுக்கொள்ளாத நாசர் பிரபுவை துப்பாக்கியால் சுட்டு விடுகிறார். 

பின்னர் ரம்யா கிருஷ்ணன் பிரபுவை அழைத்துக் கொண்டு இந்தியா வருகிறார். தனது தவறை நினைத்து தினம்தினம் வருத்தப்படும் நாசர், தனது மகள் ரம்யா கிருஷ்ணனை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதனை தனது பேரனான சிம்புவிடம் சொல்கிறார்.

இவ்வளவு பணம் இருந்தும், தாத்தா நிம்மதியாக இல்லை என்பதை உணரும் சிம்பு, இந்தியா வருகிறார். இந்தியாவில் பெரிய பணக்காரராக இருக்கிறார் பிரபு. கேத்தரின் தெரசா, மேகா ஆகாஷ் பிரபுவின் மகள்கள். பிரபுவின் அபிமானத்தை பெற்று அவர்களது வீட்டில் வேலைக்கு சேரும் சிம்புவுக்கு மேகா ஆகாஷ் மீது காதல் வருகிறது.

கடைசியில், சிம்பு ரம்யா கிருஷ்ணனின் மனதை மாற்றி தன்னுடன் அழைத்துச் சென்றாரா? தனது தாத்தாவின் ஆசையை நிறைவேற்றி வைத்தாரா? அத்தை பெண்ணை கரம்பிடித்து ராஜாவாக வந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சமீபகாலமாக சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் சரியாக போகாத நிலையில், செக்கச் சிவந்தவானம் படம் சிம்புக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் சிம்பு ஸ்டைல், பஞ்ச் வசனங்கள், நகைச்சுவை என அனைத்திலும் பழைய சிம்புவை நினைவுபடுத்துகிறார். சிம்பு ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான படமாக இருக்கும் என்பதில் மாற்றமேதுமில்லை.

மேகா ஆகாஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் அவரது முதல் வெளியீடாக ரஜினியின் பேட்ட படம் தான் ரிலீசானது. அதில் மேகாவுக்கு குறைவான காட்சிகள் தான் இருந்தது. இந்த நிலையில், மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ள முதல் படமாக சிம்பு படம் வெளியாகி இருக்கிறது. படத்தில் மேகா ஆகாஷ் காதல், நடனம் என ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார். கேத்தரின் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ந்திருக்கிறார்.

அழுத்தமான கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் கைதட்டலை வாங்குகிறார். படையப்பா படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் தனது நடிப்பால் மிரள வைக்கிறார். நாசர் வயதான கதாபாத்திரத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். யோகி பாபு, ரோபோ ஷங்கர் இருவருமே காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே கதை நகர்வதற்கு உதவியிருக்கிறார்கள்.

தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த படம் என்றாலும், ரீமேக் மூலமும் சுந்தர்.சி தனது திறமையை நிரூபித்திருக்கிறார். தனது பாணியில் காதல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். என்.பி.ஸ்ரீகாந்த்தின் படத்தொகுப்பில் சிம்புவின் ஆக்‌ஷன் சிறப்பாக வந்துள்ளது.

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் சிம்புவுக்கு ஏற்ற வரிகளுடன் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.

மொத்தத்தில் `வந்தா ராஜாவாதான் வருவேன்' ராஜாதான். #VanthaRajavaathanVaruvenReview #VanthaRajavaathanVaruven #STR #Simbu #MeghaAkash #CatherineTresa #SundarC #RamyaKrishnan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com