

போட்டோகிராபராக இருக்கும் ஒரு கிராமிய இளைஞனின் வாழ்க்கையும் பழிவாங்கும் படலமும் தான் 'நிமிர்'. இது ஒரு சராசரி த்ரில்லர் படம் கிடையாது. இயக்குனர் ப்ரியதர்ஷன் தனக்கே உரிய பாணியில் இப்படத்தை செதுக்கியுள்ளார். இது ஒரு ஜனரஞ்சகமான குடும்ப படம்.
இப்படம் குறித்து இயக்குனர் ப்ரியதர்ஷன் பேசுகையில், ''இது எனக்கு ஒரு ஸ்பெஷல் படமாகும். இவ்வளவு ஆண்டு காலம் திரை துறையில் இருந்தாலும் இயக்குனர் மகேந்திரனுடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில்லை. முதலில் அவருக்கு உதவி இயக்குனராக இருக்க ஆசைப்பட்டேன். அது நடக்காமல் போனது. பிறகு பலகாலம் கழித்து இந்த படத்தில் தான் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. உதயநிதி ஸ்டாலினின் தந்தையாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. உதயநிதியின் கதாபாத்திரத்தின் வளர்ச்சிக்கு மகேந்திரன் அவர்களின் கதாபாத்திரம் மிக முக்கியமானதாகும். மகேந்திரன் சார் எங்களுக்கு கிடைத்தது அதிர்ஷ்டமாக கருதுகிறோம். அவருக்கு இந்த படத்தின் கதையை கூறியபொழுது அவர் பரிந்துரைத்த தலைப்பு தான் 'நிமிர்'. இதை விட பொருத்தமான தலைப்பு இக்கதைக்கு கிடைக்காது.
சமுத்திரக்கனியின் நடிப்பை எவ்வளவு பாராட்டினாலும் அது பத்தாது. அவ்வளவு சிறப்பாக நடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் அர்ப்பணிப்பும் நடிப்பும் இந்த கதைக்கு அவ்வளவு அழகாக பொருந்தியிருந்தது. இப்படத்தில் அவரது நடிப்பு நிச்சயம் பேசப்படும். கதாபாத்திரமாகவே மாறி அசத்தியுள்ளார். எனது எதிர்பார்ப்பை முழுவதும் நிறைவேற்றியுள்ளார். கதாநாயகி நமீதா பிரமோத் அருமையாக நடித்துள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பில் அபாரமான முன்னேற்றத்தை கண்டேன். சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் பார்வதி நாயர் நடித்துள்ளார். ரசிகர்கள் நிச்சயம் அவரது கதாபாத்திரத்தை ரசிப்பார்கள். 'நிமிர்' படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்''