

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் விழா போன்று கொண்டாடி வருகிறார்கள். முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த பலரும் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் சரியான விருந்தாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ‘ஈஸ்வரன்’ படத்தின் இயக்குநர் சுசீந்திரன் மாஸ்டர் குறித்து கூறுகையில், "மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மாஸ்டர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை எங்கள் ஊரில் உள்ள திரையரங்கில் பார்த்து ரசித்தேன். துப்பாக்கி படத்துக்குப் பிறகு விஜய்யின் மாஸ்டர் பீஸாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. மிகவும் பிரமாதமாக நடித்திருக்கிறார் விஜய்.
இந்த மாதிரியான ஒரு கதையை விஜய்க்கு கொடுத்ததற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு நன்றி. திரைக்கதை அமைப்பது தொடங்கி நடிகர்கள் தேர்வு வரை மிகச்சரியாக கையாண்டிருக்கிறார் லோகேஷ். குறிப்பாக விஜய் சேதுபதி வில்லத்தனத்தை ரசிக்கும்படி செய்திருக்கிறார். இந்தப் படம் பொங்கலுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்’ என்றார்.