கதை ரெடி... ரஜினிக்காக காத்திருக்கும் பிரேமம் பட இயக்குனர்

ரஜினிகாந்த் சாரை வைத்து நான் படம் எடுக்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிருந்தால் அது நடந்தே தீரும் என பிரேமம் பட இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அல்போன்ஸ் புத்திரன், ரஜினிகாந்த்
அல்போன்ஸ் புத்திரன், ரஜினிகாந்த்
Published on

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து `பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான `பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. நிவின் பாலியின் மூன்று பரிணாமங்கள் குறித்து காட்டப்பட்ட `பிரேமம்' படத்தில், மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியின் கதாபாத்திரம் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது.

‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. 'பிரேமம்' படத்தின் வெற்றிக்கு பிறகு 5 ஆண்டுகளாக எந்த ஒரு பட அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்த அல்போன்ஸ் புத்திரன், கடந்தாண்டு தனது அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தார். ‘பாட்டு’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பஹத் பாசில் நாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரனிடம் ரசிகர் ஒருவர், ரஜினியை வைத்துப் படம் இயக்குவதற்காகக் கதை வைத்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு அல்போன்ஸ் புத்திரன் பதிலளித்து பதிவிட்டுள்ளதாவது: “ரஜினி சாருக்கு கதை வைத்திருக்கிறேன். ‘பிரேமம்’ படத்துக்கு பிறகு அவரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், இதுவரை சந்திக்க முடியவில்லை. ரஜினிகாந்த் சாரை வைத்து நான் படம் எடுக்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிருந்தால் அது நடந்தே தீரும். 

நேரம் மட்டும் சரி ஆகட்டும். நாம் பாதி வேலையை செய்துவிட்டால் கடவுள் மீதி வேலையை பார்த்துக்கொள்வார் என்று நம்பிக்கை உள்ளது. தற்போது கடவுள் கொரோனாவை அழிப்பதில் பிசியாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதன்பிறகு திரும்பவும் முயற்சிப்பேன்”. இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com