தமிழிசையை விமர்சிக்காதீர்கள் : ரசிகர்களுக்கு சூர்யா தலைமை மன்றம் வேண்டுகோள்

பாஜக கட்சியின் மாநில தலைவர் தமிழிசையை யாரும் விமர்சிக்காதீர்கள் என்று சூர்யா ரசிகர்களுக்கு தலைமை மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
தமிழிசையை விமர்சிக்காதீர்கள் : ரசிகர்களுக்கு சூர்யா தலைமை மன்றம் வேண்டுகோள்
Published on

பெரும் மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய மன்ற தம்பிகள் அனைவருக்கும் தலைமை மன்றத்தின் சார்பாக ஒரு வேண்டுகோள்.

அண்ணன் சூர்யா அவர்கள் நீட் தேர்வை பற்றி தமிழ் ஹிந்து நாளேட்டில் தம்முடைய கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் ஆக்கபூர்வமான ஆதரவு குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எதிர்பாராத விதமாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் மதிப்பிற்குறிய மருத்துவர் தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் மட்டும், மேலோட்டமாக விமர்சித்துள்ளார்.

அது அவரது கருத்து. அதற்கு எதிர்வினையாக, சமூக வலைத்தளங்களில் உங்களில் சிலர் தரமற்ற வார்த்தைகளால் மருத்துவர் தமிழிசை செளந்தரராஜன் அவர்களை விமர்சிப்பதாக அறிகிறோம். இதனை சூர்யா அண்ணன் அவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார். கருத்து தளத்தில் வரும் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்வதும் நமது ஆரோக்யமான செயல்பாடுகளால் எதிர்வினையாற்றுவதுமே சூர்யா அண்ணன் நமக்கு கற்றுத்தந்த நற்பண்பு. அதைவிடுத்து இது போன்ற தரமற்ற விமர்சனங்களில் இறங்கும் மன்ற உறுப்பினர்களையும், உறுப்பினராக அல்லாமல் சமூக வலைத்தளங்களில் செயல்படும் ரசிகர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

மற்றபடி அந்த கட்டுரையில் இருக்கும் கருத்துக்களிலும் அதன் செயல் வடிவத்துக்கான பணிகளிலும் சூர்யா அண்ணன் எப்போதும் உறுதியாக இருப்பார். அகரத்தை பற்றியும், அண்ணன் சூர்யா பற்றியும் சமூகத்தில் உள்ள கல்வியாளர்களுக்கு நன்கு தெரியும். 'செயல் அது ஒன்றே மிக உயர்ந்த சொல்' என்ற தாரக மந்திரத்தில்தான் நம்முடைய நற்பணி இயக்கமானது எப்போதும் செயல் பட்டு கொண்டிருக்கிறது.

"விளம்பரத்திற்காக எதையும் செய்யாதீர்கள், உங்கள் மனதார மற்றவர்களுக்கு உதவுங்கள்" என்ற அண்ணன் சூர்யாவின் சொற்படியே கடந்த இருபது வருடங்களாக மன்றமானது செயற்படுகிறது. இனிமேலும் செயற்படும். ஒருவர் நம்மை கேள்வி கேட்பதனாலேயே அவரிடம் நம்முடைய உண்மைத் தன்மையை நிரூபிக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. நம்முடைய செயல்கள் யாரையும் காயப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் அளித்தால் போதுமானது. எம் தம்பிமார்களின் செயல்கள், மதிப்பிற்குறிய அம்மா மருத்துவர் தமிழிசை செளந்தரராஜன் அவர்களை எந்தவிதத்திலாவது காயப்படுத்தி இருந்தால், அதற்கான வருத்தத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com