ரஜினிகாந்தின் 2.0 படத்தை ரிலீஸ் செய்வதில் நீடிக்கும் குழப்பம்

ரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்தின் 2.0 படத்தை எப்போது திரைக்கு கொண்டு வருவது என்று படக்குழுவினர் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள். #2point0 #Rajinikanth
ரஜினிகாந்தின் 2.0 படத்தை ரிலீஸ் செய்வதில் நீடிக்கும் குழப்பம்
Published on

படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் உள்பட படத்தில் நடித்துள்ள நடிகர்-நடிகைகள் அனைவரும் ‘டப்பிங்’ பேசியும் முடித்து விட்டனர்.

கடந்த வருடம் தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். தொழில் நுட்ப பணிகள் தாமதமானதால் ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்தனர். பின்னர் ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் அன்று படம் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

2.0 படத்துக்கு பதில் ரஜினிகாந்தின் காலா படம் அதே நாளில் வெளியாகிறது. 2.0 படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. தற்போது இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதிக்கு வெளியாக இருக்கிறது என்றும் அதை விட்டால் தீபாவளிக்கு தள்ளிப்போகும் என்றும் கூறப்படுகிறது.

2.0 படம் ரூ.400 கோடிக்கு மேல் செலவில் தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியிட உள்ளனர். பண்டிகை நாட்களில் படத்தை திரைக்கு கொண்டு வருவதே சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகிறார்கள். இந்தியா முழுவதும் அதிகமான தியேட்டர்களில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

சுதந்திர தினத்தில் அக்‌ஷய்குமார் நடித்துள்ள ‘கோல்டு’ என்ற இந்தி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அதே நாளில் அவர் நடித்துள்ள 2.0 படத்தையும் வெளியிடுவது சரியாக இருக்குமா? என்று படக்குழுவினர் யோசிக்கிறார்கள். அக்‌ஷய்குமாருக்கு வட இந்தியாவில் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளனர். இரு படங்களையும் ஒன்றாக ரிலீஸ் செய்தால் வசூல் பாதிக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com