என்னை யாரும் மிரட்டவில்லை - சிம்பு விளக்கம்

ஜி.எஸ்.டி.க்கு எதிரான பாடலை பாடியதற்காக என்னை யாரும் மிரட்டவில்லை என்று நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.
என்னை யாரும் மிரட்டவில்லை - சிம்பு விளக்கம்
Published on

இது தொடர்பாக எனக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த மிரட்டலும் வரவில்லை என்கிற வகையிலும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிம்பு அளித்துள்ள பேட்டி வருமாறு:-

பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு பின்னரே இந்த பாடல் வந்துள்ளது. இது நான் எழுதிய பாடல் இல்லை.

இந்த பாடலுக்கு இது வரையில் எந்த எதிர்ப்பும் எழவில்லை. யாரும் என்னை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கவும் இல்லை. போலீசார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே எனது வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போட்டுப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போது நேர்மறையான கருத்துக்களும், எதிர்மறையான கருத்துக்களும் கூறப்பட்டன. அப்போது சாதாரண மக்களுக்கு பிரச்சினைகளும் ஏற்பட்டன. அதனால் ஏற்பட்ட சில பாதிப்புகளைத்தான் பாடலில் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக நான் எந்த ஒரு வி‌ஷயத்தையும் எனக்கு சரி என்று பட்டால் அதனை சொல்வதற்கு பயப்படமாட்டேன். அந்த வகையில்தான் இந்த பாடலை நான் பாடி உள்ளேன். இதனை நான் சர்ச்சையாக பார்க்கவில்லை. ஒரு கருத்தை தெரிவிக்கும் வகையிலேயே பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலை பாடியதற்காக நான் வருத்தப்படவில்லை. என் வேலையை நான் செய்துள்ளேன்.

மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வசனம் இடம் பெற்றது பற்றி என்னிடம் கருத்து கேட்கிறார்கள். அது பற்றி இப்போது கருத்து தெரிவிப்பது தவறு என்று நினைக்கிறேன்.

இந்த பாடலை யாரும் தவறாக எடுத்துக் கொண்டார்களா? என்பது தெரிய வில்லை. யாரும் இதுவரையில் தவறு சொல்லவில்லை. ஒருவேளை அது வருத்தம் அளிக்கும் வி‌ஷயமாக இருந்தால் நான் இப்போதே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யார் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com