நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டம் - காவல்துறை அறக்கட்டளை திறப்புவிழாவில் கார்த்தி

பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய அறகட்டளை ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அதற்காக நடிகர் கார்த்தி உட்பட பலரும் நிதி வழங்கினர். #Karthi
நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டம் - காவல்துறை அறக்கட்டளை திறப்புவிழாவில் கார்த்தி
Published on

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இணைந்து, அமைத்துள்ள அறக்கட்டளையின் துவக்க விழா நேற்று நடந்தது. இதில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தி,

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த பிறகு, பொது மக்களில் ஒருவனாக போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது எனக்கு. இங்கே நேர்மைக்காக கொடுக்க வேண்டிய விலை இன்னும் பெரிதாக உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படபோவது யாரு என்று பார்த்தால் அவர்களுடைய குடும்பத்தினர் தான். போலீஸ் அதிகாரிகள் எப்போதும் பணியிலேயே இருப்பவர்கள். அவர்களுடைய குடும்பங்கள் நன்றாக இருந்தால் தான் அவர்களால் தைரியமாக வேலை செய்ய முடியும்.

நள்ளிரவிலும் வேலை செய்கிறார்களே, அந்த போலீஸ் அதிகாரிகள் சாப்பிட்டிருப்பார்களா என்று என்னுடைய மனைவி என்னிடம் கேட்டார். அப்படி இரவு, பகல் பாராமல் வேலை செய்யும் காவல் துறையினருக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய ஒரு அறகட்டளை வேண்டும். அப்படிப்பட்ட அறக்கட்டளையை தான் நாங்கள் இப்போது நிறுவியுள்ளோம். இந்த அறகட்டளை இப்போது பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளையும், ஓய்வு பெற்ற அதிகாரிகளையும் அவர்களுடைய குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளும் ஒரு அரணாக இருக்கும். இது பொது மக்களால் முன்னின்று நடத்தப்படும் ஒரு விஷயமாக இருக்கும். இப்போது இது கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் வரவேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. இது கண்டிப்பாக மேலும் வளரும்.

இங்கே இருக்கும் போலீஸ் அதிகாரிகள் தூங்காமலேயே வேலை செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாகிறது. அந்த அழுத்தத்தாலேயே அவர்கள் மக்களிடம் கோபப்படுகிறார்கள். அவர்களுக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் தூங்க நேரம் கொடுக்க வேண்டும். அதேபோல் இன்னும் நிறைய போலீஸ் அதிகாரிகளை புதிதாக பணியமர்த்தினால் தான் தூங்காமல் அனைவரும் வேலை செய்யும் நிலை மாறும். அவர்களுக்கு தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை கிடையாது. அவர்கள் மனதளவில் சந்தோஷமாக இருந்தால் தான் அவர்கள் நம்மோடு பேசும் போது சந்தோஷமாக பேசுவார்கள். நாம் நன்றாக வேலை செய்யும் அதிகாரிகளை புகழ்ந்து பேசுவதில்லை. ஆனால் அவர்களை பற்றி தவறாக மட்டும் தான் பேசுகிறோம். நாமும் நிறைய மாற வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

போலீஸ் அதிகாரிகளின் மனசுமை குறைய அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை என்றார் கார்த்தி.

இந்த அறகட்டளைக்கு நடிகர் கார்த்தி, சக்தி மசாலா, ராம்ராஜ் காட்டன், வனிதா மோகன், ஆறுமுகசாமி ஆகியோர் ரூ.10 லட்சம் விகிதம் ரூ.50 லட்சம் அறகட்டளைக்கு நிதியாக வழங்கினர். #Karthi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com