

`தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்கு பிறகு கார்த்தி தற்போது `கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி சங்கர் மற்றும் அர்த்தனா நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், கார்த்தி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. ரஜத் ரவிசங்கர் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து, கார்த்தியின் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார்.
பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
கார்த்தியின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார். இவர் சிங்கம் 2, மோகனி படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயணத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படம் இமயமலை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது.
8-ம் தேதி துவங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் சென்னையில் ஆரம்பமாகிறது. தொடர்ந்து ஐரோப்பாவில் 15 நாட்களும், ஹைதராபாத், மும்பை, இமயமலை பகுதிகளிலும் உருவாக இருக்கிறது. #Karthi17