

திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இது எனக்கு ஒன்பதாவது படம் என்று நினைக்கிறேன். இந்த படத்தில் நான் ஒரு கிராமத்து இளைஞனாக நடிக்கிறேன். அத்துடன் வெளி நிறுவனங்களின் தயாரிப்பில் முதன் முதலாக நடித்து உள்ளேன். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்படமாக அமையும் என நம்புகிறேன். கூவத்தூர் சம்பவம் பற்றி ஆந்திராவில் தெலுங்கு படம் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுபோன்ற படங்களில் நடிப்பீர்களா? என்றும் கேட்கிறீர்கள். என்னைப்பொறுத்தவரை நல்ல கதையம்சம் உள்ள அரசியல் தொடர்பான படங்களிலும் நடிப்பேன் என தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தபோது எடுத்த படம். அருகில் நடிகர்கள் பார்த்திபன், சூரி, நடிகை நிவேதா உள்ளனர்.
இந்த படத்தின் கதாநாயகி நிவேதா கூறுகையில் ‘நான் மதுரையை சேர்ந்த தமிழ்ப்பெண். நான் 14 வருடங்கள் துபாயில் இருந்து விட்டு வந்து இருக்கிறேன். இது எனக்கு இரண்டாவது படம்’ என்றார். நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கூறுகையில் ‘உதய நிதி ஸ்டாலின் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றாலும் எந்த வித பந்தாவும் இன்றி எப்போதும் இயல்பாக இருக்க கூடியவர். எதற்காகவும் அவர் நடிக்க மாட்டார். இயல்பாக தான் நடிப்பார். இந்த படத்தில் ஊத்துக்காட்டான் என்ற பாத்திரத்தில் கதாநாயகி நிவேதாவுக்கு அப்பாவாக நடிக்கிறேன். நான் எந்த படத்தில் நடித்தாலும் கதையை தான் பார்ப்பேனே தவிர கதாநாயகனா, வில்லனா என்றெல்லாம் பார்ப்பது கிடையாது’ என்றார்.