நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி

நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி

நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவை போல் யாரும் ஆக கூடாது என்பதற்காக நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.
Published on

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என கடந்த ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் பலனளிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் தன்னால் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லையே என மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார். இவரது தற்கொலை தமிழ்நாட்டையே உலுக்கியது. 

அனிதா மறைவிற்கு ரஜினி, கமல், ஜி.வி.பிரகாஷ், சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ், விவேக், இயக்குனர்கள் பா.இரஞ்சித், சீனு ராமசாமி, பாண்டிராஜ் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். 

தற்போது ஜி.வி.பிரகாஷ், இது போன்று யாரும் தற்கொலை செய்யக்கூடாது என்பதற்காக புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீட் எனும் அரக்கனால் தங்கை அனிதாவை இழந்தோம். அனிதாவின் வீட்டிற்கு சென்றபோது இனி மற்றொரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக் கூடாது என்று தீர்க்கமான முடிவு எடுத்தேன். என் நண்பகளுடன் பேசி வல்லுநர்கள், ஆசிரியர்களை ஒன்றிணைத்து நீட் தொடர்பாக மூன்று மாதமாக வரைவு திட்டத்தை தயாரித்து தமிழ் வழி, ஆங்கில வழி மாணவர்கள் இலவசமாக பயன் பெறும் வகையில் மென் செயலி (Mobile Application) உருவாகி வருகிறது.

தகுதியான மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பணம் என்ற ஒற்றை காரணத்தால் எந்த மாணவரும் பாதிப்படையக் கூடாது என்ற அடிப்படையில் எங்களால் முடிந்த முயற்சி. இன்னும் சில மாதங்களில் இந்த மொபைல் ஆப் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வரும். செயலி உருவாக்க உதவும் எனது குழுவிற்கு வாழ்த்துகள்’ என்று கூறியிருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com