

மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதை என்றாலும் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை கிளம்பி அது தேசிய அளவிலும் பூதாகரமானதாக வெடிக்கத் தொடங்கியது. எனவே சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து குறிப்பிட்ட காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு சம்மதம் தெரிவித்த போதும், தயாரிப்பாளர் சங்ம் சார்பில் காட்சிகளை நீக்க தேவையில்லை என்று தெரிவித்தது. இதற்கிடையே திரைத்துறையை சேர்ந்த பலரும் பொதுமக்களும் மெர்சல் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அரசியல் பிரச்சனையாக உருவெடுத்த இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவிக்க பின்னர் தேசிய அளவில் பிரபலமாகியது.
இதையடுத்து படத்தில் இருந்து எந்த காட்சிகளும் நீக்கப்படமாட்டாது என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதிபாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தில் இருந்த நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக படத்தின் எடிட்டரான ரூபன் அவரது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
`மெர்சல்' படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து தான் ஏதும் கூறவில்லை. படத்தின் நீளம் காரணமாக சில பாடல்கள் மற்றும் காமெடி காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. மற்றபடி படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளையோ / பாடல்களையோ வெளியிட படக்குழு எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.