அனைவரையும் சரிசமமாக பார்க்கும் மனிதன் விஜயகாந்த்- விஷால் புகழாரம்

விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.விஷால் மற்றும் ஆர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
அனைவரையும் சரிசமமாக பார்க்கும் மனிதன் விஜயகாந்த்- விஷால் புகழாரம்
Published on

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் விஷால், "தமிழ் திரையுலகில் ஒரு மிக சிறந்த நடிகர். கலையுலகத்தில் மட்டுமல்ல பொது மக்களிடம் சிறந்த மனிதர் என்று பெயர் வாங்கிய ஒருவர். ஒரு நல்ல அரசியல்வாதி. விஜயகாந்தின் தைரியம், உழைப்பு ஆகியவற்றை முன்னுதாரணமாக வைத்து தான் நடிகர் சங்கத்தில் நாங்கள் செயல்பட ஆரம்பித்தோம்.

விஜயகாந்தின் அலுவலகத்தில் எப்போதும் சமையல் நடந்து கொண்டே இருக்கும். எல்லோரையும் சரிசமமாக பார்க்கும் மனிதன் கேப்டன் (விஜயகாந்த்) மட்டும் தான். அவரது மறைவு அன்று நான் இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது. ஒரே ஒரு விஷயம் தான் நான் அவரை பார்த்து சொன்னேன் மன்னித்துவிடு சாமி. நான் அவரது கடைசி நேரத்தில் இருந்திருக்க வேண்டும், ஆனால் என்னால் முடியவில்லை. விஜயகாந்த் குடும்பத்திற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்" என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com