

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் நாளை ரிலீசாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார்.
காலா படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
காலா படம் மும்பையில் வாழ்ந்த தமிழரான திரவியம் நாடார் என்பவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, படத்தில் திரவியம் நாடாரை தவறாக காட்டியிருப்பதாகவும், அவர் இன வேறுபாட்டைத் தூண்டுவது போல் காட்சிகள் இருப்பதாகக் கூறி, மும்பை வாழ் தமிழரான திரவியம் நாடாரின் மகன் ஜவஹரின் வழக்கறிஞர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ரஜினிகாந்த்துக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், படத்தை பார்க்காமலேயே அதில் தவறாக சித்தரித்திருப்பதாக எப்படி கூற முடியும் என்று கேட்ட நீதிபதிகள், படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். #Kaala #Rajinikanth