

‘டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 1-ந் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது.
சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டன. வருகிற 16-ந் தேதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுகின்றன. 23-ந் தேதி முதல் வெளிப்புற படப்பிடிப்புகளும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், சினிமா தியேட்டர் உரிமையாளர்களும் சில கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தனர். அவை நிறைவேற்றப்படாவிட்டால் வருகிற 16-ந்தேதி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை தொடர்பாக பலமுறை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டன. தற்போது சினிமா துறை முழுவதுமாக முடங்கிவிட்டது. எனவே ரஜினி, கமல் ஆகியோர் திரையுலக பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் கூறியிருப்பதாவது:-
அரசியலுக்கு தங்களை உயர்த்திக்கொண்ட உச்ச நட்சத்திரங்களுக்கு வாழ்த்துக்கள். ஏற்றிவிடப்பட்ட ஏணி (சினிமா) இப்போது சீக்கு வந்த யானையாக இருக்கிறது.
நீங்கள் இருவரும் (ரஜினி,கமல்) ஆண்டு அனுபவித்து ஆஸ்தி சேர்க்க அனைத்துமாக இருந்த திரைத்துறையின் இன்றைய இன்னல்களை உங்கள் சேவையால், பார்வையால் காப்பாற்ற ஏதாவது செய்யுங்கள்.
அதன்பிறகு உங்கள் அரசியல் பயணத்தை தொடங்குங்கள். நாங்கள் உடன் இருப்போம். யோசித்து உடனே வாருங்கள். கவலையோடு அல்லாடிக் கொண்டிருக்கிறது திரைத்துறை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதுபோல் திரைத் துறையின் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து உள்ளனர். ரஜினி, கமல் தவிர மற்ற பிரபல நடிகர்களும் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். நடிகர்கள், இயக்குனர்கள் சம்பளத்தை முறைப்படுத்த வேண்டும்.
மற்ற மாநிலங்களில் இருப்பது போல குறிப்பிட்ட தொகையை சம்பளமாக நிர்ணயிக்க வேண்டும். படம் வெளியான பிறகு அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை அவர்களுக்கு கொடுக்கலாம்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தால் திரையுலகம் முழுமையாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை நம்பி இருக்கும் லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் தவிக்கும் அபாயம் உள்ளது. எனவே, விரைவில் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். இதில் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தலையிட வேண்டும் என்று திரையுலகின் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். #TFPC