12-12-1950

ரஜினி ரசிகராக கபாலி செல்வா இயக்கிய நடித்துள்ள `12-12-1950' படத்தின் விமர்சனம்.
Published on

ரமேஷ் திலக், ஆதவன், அஜய் பிரசாத், பிரசாத் கிருபாகரன் ஆகிய 4 பேரும் நண்பர்கள். இவர்களுக்கு குங் பூ சொல்லிக் கொடுக்கும் மாஸ்டரான கபாலி செல்வா தீவிர ரஜினி ரசிகர். சிறு வயதில் இருந்தே ரஜினி மீது தீவிர பக்தியுடன் இருக்கும் கபாலி செல்வாவை பார்த்து, ரமேஷ் திலக் உள்ளிட்டவர்களும் ரஜினியின் ரசிகர்களாகவே வருகின்றனர். இந்நிலையில், அந்த பகுதி கவுன்சிலர், ரஜினி படத்தின் போஸ்டரை கிழிப்பதை பார்க்கும் கபாலி செல்வா அவருடன் சண்டை பிடிக்கிறார். 

இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கபாலி செல்வா அவரை தள்ளிவிட அவர் அருகிலிருந்த கம்பி மீது விழுந்து உயிரிழக்கிறார். இந்த குற்றத்திற்காக கபாலி செல்வாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறைக்கும் செல்கிறார். பின்னர் சில நாட்களில் ரஜினி நடிப்பில் கபாலி படம் திரைக்கு வருகிறது. 

அந்த படத்தை பார்க்க ஆசைப்படும் கபாலி செல்வாவை, பரோலில் வெளியே கொண்டு வர முயற்சி செய்கின்றனர். அதேநேரத்தில் செல்வாவை ரஜினியுடன் சந்திக்க வைக்கவும் முயற்சி செய்கின்றனர். ஆனால் படம் ரிலீசுக்கு பரோல் கிடைக்காது என்பதால், சாகும் நிலையில் இருக்கும் செல்வாவின் 100 வயது மதிக்கத்தக்க தாத்தாவை பட ரிலீசின் போது கொலை செய்ய முடிவு செய்ய, அதற்கு முன்பே அவர் இறந்து விடுகிறார். 

இதையடுத்து படம் ரிலீசாகும் சமயத்தில் அவரது இறந்துவிட்டதாகக் கூறி பரோல் வாங்க முடிவு செய்கின்றனர். இந்நிலையில், போலீசில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தம்பி ராமைய்யா, வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதை ரமேஷ் திலக் மற்றும் அவரது நண்பர்கள் வீடியோ எடுத்துவிடுகின்றனர். இதையடுத்து செல்வாவை வெளியே கொண்டு வர பரோல் வாங்கி தராவிட்டால் அவரது மனைவியிடம் அந்த வீடியோவை காட்டிவிடுவதாக தம்பி ராமைய்யாவை மிரட்டுகின்றனர். 

அதே நேரத்தில் வெளியே வரும் செல்வாவை கொலை செய்ய கவுன்சிலரின் தம்பியும் திட்டம் போடுகிறார். கடைசியில் கபாலி செல்வா பரோலில் வெளியே வந்தாரா? கபாலி படத்தை பார்த்தாரா? ரஜினியை சந்தித்தாரா? கவுன்சிலர் தம்பியின் திட்டம் என்ன ஆனது? கபாலி செல்வாவின் ஆசை முழுமை அடைந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை. 

கபாலி செல்வா ஒரு ரஜினி ரசிகராகவே வாழ்ந்திருக்கிறார். அவரது நடிப்பும், ரஜினி ரசிகராக அவர் எடுத்திருக்கும் முயற்சிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்கலாம். ரமேஷ் திலக், ஆதவன், அஜய் பிரசாத், பிரசாத் கிருபாகரன் உள்ளிட்ட 4 பேரின் நடிப்பும் கதைக்கு பக்கபலமாகவே இருக்கிறது. 4 நண்பர்கள் சேர்ந்தால் என்ன கலகலப்பு இருக்குமோ அதை பார்க்க முடிகிறது. யோகி பாபு காமெடியில் ரசிக்க வைக்கிறார். கபாலி செல்வாவுக்கு அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாகவும், கமல் ரசிகராகவும் தம்பி ராமையா அவரது ஸ்டைலில் நடித்து அசத்தியிருக்கிறார். 

ரஜினி ரசிகர் ஒருவருக்கு, அவரது படத்தை ரிலீஸ் ஆகும் நாளில் பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதை மையப்படுத்திய கதையை காமெடி, சண்டை என அனைத்தும் கலந்து கொடுக்க கபாலி செல்வா முயற்சி செய்திருக்கிறார். அது ஓரளவுக்கு பலித்திருக்கிறது. அதுமட்டுமின்றி இது ஒரு ரஜினி ரசிகரின் வாழ்க்கையில் நடக்கும் கதையை மையப்படுத்தியே செல்வதால், சுவாரஸ்யம் அதிகமில்லை. 

ஆதித்யா, சூர்யா, டபாஸ் நாயக் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. விஷ்ணு ஸ்ரீ கேவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாகவே வந்திருக்கிறது. 

மொத்தத்தில் `12-12-1950' விழா நாள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com